அன்னவாசல் அருகே நுங்கு வாங்கி தருவதாக கூறி 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது!
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
தொண்டைமான் நகரில் பெற்றோரும் வசித்து வரும் 7 வயது சிறுமி, தற்போது பள்ளி விடுமுறை என்பதால், அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பாட்டியின் வீட்டின் முன்பு சிறுமி விளையாடி கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பாண்டியன் 40, என்பவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் சாப்பிட நுங்கு வாங்கி தருவதாக ஆசைகாட்டி, சிறுமியை ஒதுக்குப்புறமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனால் சிறுமி அந்த நபரிடமிருந்து தப்பித்து அழுதபடியே வீட்டிற்கு ஓடி வந்து பாட்டியிடம் முறையிட்டு இருக்கிறாள்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி, உடனடியாக சிறுமியை புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பின்னர், சிறுமிக்கு நடந்த கொடூரம் குறித்து அன்னவாசல் காவல்நிலையத்தில் பாட்டி புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.