9 வயது சிறுமியிடம் தப்பா நடந்த 42 வயது சித்தப்பா.. தேடி வரும் போலீசார்
9 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சித்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி: 9 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த சித்தப்பா தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவருக்கு 42 வயதில் சரவணன் என்ற மகன் உள்ளார். கூலித் தொழிலாளியான சரவணனின் மனைவியின் அக்காள் திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு சரவணன் கடந்த 2ம் தேதி சென்றுள்ளார். தங்கையின் கணவர் என்பதால் மரியாதையுடன் வீட்டில் அனுமதித்து உபசரித்தார்கள் மனைவியின் அக்காள் குடும்பத்தினர். இவர்கள் இருவருக்கும் 9 வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. அந்தக் குழந்தையும் சித்தப்பா என்ற முறையில் சரவணனுடன் நன்றாக விளையாடி உள்ளார். மேலும், இரவு தூங்கும் போது, சிறுமி சித்தப்பாவுடன் தூங்கியுள்ளார்.
ஆனால், சித்தப்பா சிறுமியும் அவரது பெற்றோரும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்த போது, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், விடிந்த உடன் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சரவணன் வெளியேறி இருக்கிறார்.
சரவணன் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்த விஷயத்தை சிறுமி பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சரவணன் மீது ஆத்திரம் கொண்டனர். பின்னர், இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட சரவணன் தலைமறைவாகிவிட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை தேடி வருகின்றனர்.
9 வயது சிறுமியை, சித்தப்பா பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெருமாபட்டு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.