சென்னை தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை.. 29 குழந்தைகள் மீட்பு
சென்னை ஆவடியில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து 3 மாஜிஸ்திரேட்டுகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
சென்னை: ஆவடியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து 3 மாஜிஸ்திரேட்டுகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
தமிழகத்தில் தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் காப்பகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தலை தூக்கியுள்ளன.
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 7வது தெருவில் செயின்ட் அண்ணா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியுடன் இணைந்த குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
பாலியல் தொல்லை
இங்கு தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக இந்த காப்பகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் திருமுல்லைவாயல் அரசு பள்ளியில் நேற்று நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு குறைதீர்க்கும் முகாமில் புகார் தெரிவித்துள்ளார் .
மாஜிஸ்திரேட்டுகள் அதிரடி
இதனை தொடர்ந்து முகாமை நடத்திய மாஜிஸ்திரேட்டுகள் அனிதா ஆனந்த், சவுந்தரியா, அருள் சபாபதி உள்பட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அந்த காப்பகத்தில் மாலை அதிரடி விசாரணை நடத்தினர்.
29 குழந்தைகள் மீட்பு
ஆய்வில் புகார் உறுதியானதை தொடர்ந்த காப்பகத்தில் தங்கி பள்ளியில் பயின்று வந்த 29 குழந்தைகளை காவல்துறையினர் உதவியுடன் மீட்டு பொத்துாரில் உள்ள மரியாலயா காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காப்பக உரிமையாளர்கள்
சம்பவம் தொடர்பாக காப்பக ஊரிமையாளர் விமலா ஜேக்கப், ஊழியர்களான பாஸ்கர், முத்து ஆகியோரை ஆவடி மகளிர் காவல்துறையினர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.