சென்னையில் 'மப்'பில் நர்ஸுகளுக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ. உள்பட 2 போலீசார் டிஸ்மிஸ்
சென்னை: சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அபிராமி நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பணம் படைத்தவர்களின் வீடுகளில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் அந்த தொண்டு நிறுவனத்தில் ஏராளமான பெண் நர்ஸுகள் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் விருகம்பாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், போலீஸ்காரர் ராஜா ஆகியோர் அந்த தொண்டு நிறுவனத்திற்கு தினமும் குடிபோதையில் சென்று அங்கிருக்கும் நர்ஸுகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.
மேலும் தொண்டு நிறுவனத்தில் விபச்சாரம் நடப்பதாக பொய்க் குற்றச்சாட்டு கூறி சோதனை நடத்தி பிரச்சனை செய்துள்ளனர். அந்த இரண்டு பேரின் தொல்லையை தாங்க முடியாமல் தொண்டு நிறுவனத்தினர் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
அவர்களின் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குமரேசன், ராஜா ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.