சென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாலியல் உட்பட பல தொல்லை.. பின்னணியில் யார், யார்?
Recommended Video
சென்னை: சென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாதுகாவலர்கள், சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவ-மாணவிகள் பாலின வேறுபாடு மறந்து பழகுவது வழக்கம். சமீபத்தில் மாணவன் ஒருவர் தனது தோழியை கேண்டீனில், கட்டிபிடித்து வழியனுப்பி வைத்தபோது, அதை ஊழியர் ஒருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள கூடாது என அவர் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இதை எதிர்த்து, மாணவ-மாணவிகள் ஐஐடி வளாகத்தில் கட்டிப்பிடிக்கும் போராட்டத்ததை நடத்தியுள்ளனர்.
ஐஐடி சர்வே
இதனிடையே, மாணவிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அதிலும் குறிப்பாக பாதுகாவலுக்கு உள்ள செக்யூரிட்டிகள் நடுவே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது. ஐஐடி மெட்ராசில் உள்ள 'தி பிப்த் எஸ்டேட்' என்ற மாணவர்கள் நடத்தும் மீடியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய சர்வேயில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு மாணவிகள் இதுகுறித்து பெயரை வெளியே தெரிவிக்காமல் ஊடகங்களிடம் தற்போது வாய் திறந்துள்ளனர்.
கலாச்சார பாதுகாவலர்கள்
இதுபற்றி ஒரு மாணவி கூறுகையில், "கலாச்சார பாதுகாவலர்கள் போல செக்யூரிட்டிகள் நடந்து கொள்கிறார்கள். ஒருநாள் இரவில், ஐஐடி வளாகத்தில் நானும் சில மாணவர்களும் அமர்ந்து பேசியபோது அங்கே வந்த செக்யூரிட்டி ஒருவர், இதுபோல நடந்து கொள்வது வருங்கால திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார். நாங்கள் தவறு செய்யவில்லை. உட்கார்ந்திருந்த இடம் இருட்டாக இருந்ததை வைத்து அவரே முடிவு செய்து அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார். வேண்டுமானால் எனது ரூமில் சென்று செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் அறுவெறுப்பாக பேசினார்" என்று தெரிவித்தார்.
பெரும்பாலான மாணவிகள்
ஐஐடியில் படிக்கும் ஐந்தில் 4 மாணவிகளாவது செக்யூரிட்டிகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வேயில் தெரிவித்துள்ளனர். சில செக்யூரிட்டிகள் ஆண் மாணவர்களை அடித்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் மொத்தம் 815 பேர் பங்கேற்று கருத்து கூறியுள்ளனர். அதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உடன்படிக்கும் மாணவர்கள்
ஐஐடியில் உடன் படிக்கும் மாணவர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக சர்வேயில் கருத்து கூறியதில் 67 சதவீதம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். ஆண் மாணவர்களும் கூட வளாகத்திற்குள் பாலியல் சீண்டல்களுக்கு உட்பட்டுள்ளதாக அந்த சர்வே தெரிவித்துள்ளது. உடன் படிப்பவர்கள், செக்யூரிட்டிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்களாம்.
சரி செய்ய நடவடிக்கை
பாலியல் சீண்டல்களை தவிர்க்க மாணவ, மாணவிகள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். ஆண்-பெண் இணைந்து செயல்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும், ஆண்-மகளிர் விடுதிகளை இணைத்து (co-ed hostels) செயல்படுத்த வேண்டும், பாலியல் பிரச்சினை பற்றி ஓபனாக விவாத நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது போன்றவை அந்த கோரிக்கைகள்.