திருவண்ணாமலை அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசு பள்ளி முதல்வர் சஸ்பெண்டு
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பள்ளி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 5-ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன் பாலியல் தொல்லையும் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கலசப்பாக்கம் அருகே உள்ள பகுதி ஆதமங்கலம் புதூர். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன். இவர் அந்த பள்ளியில் பயின்று வரும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த மாணவிக்கு அவர் தொடர்ந்து பாலியல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
தலைமை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக அந்த மாணவி தன் பெற்றோரிடத்தில் சென்று முறையிட்டார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மாணவியின் பெற்றோர் கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்தனர். ஆனால் புகார் அளித்தும் போலீசார் அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பாக இன்று பள்ளியில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என நிரூபணமானது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் அதிரடியாக தலைமை ஆசிரியர் பணியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனால் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.