மதுரை: மணிப்பூர் மாணவிக்கு பாலியல் தொல்லை… முதல்வரை கைது செய்யக் கோரி போராட்டம்
சென்னை: மதுரையில் மணிப்பூர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பி.எச்.டி படித்த மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடியின மாணவியை கல்லூரி முதல்வர் அறிவர். ஞானவரம் பாலியல் தொந்தரவு செய்தார் என்பது புகார். அதற்கு மாணவி உடன்படாததால் ஆய்வை முடிக்க இயலாத சூழலுக்குத் தள்ளப்பட்டதாகவும், அந்த மாணவிக்கு வழங்கப்பட்ட 6 லட்சத்து 50 ஆயிரத்தை யு.ஜி.சி -க்கு திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த பாலியல் தொல்லை குறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மே மாதம் புகார் அளித்தார். கல்லூரியின் ஆசிரியர்களாலும், செராம்பூர் பல்கலைக்கழக நிர்வாகிகளாலும் உறுதி செய்யப்பட்டு மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்: 425/2013, US 354 (4) IPC -மற்றும் 3 (1) X SC/ST வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், குற்றவாளியான கல்லூரியின் முதல்வர் அறிவர். ஞானவரம் இது வரை கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்தும், அவருக்கு ஆதரவாக உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு தலைவரும், சென்னை பேராயருமான அறிவர். தேவசகாயம் அவர்களைக் கண்டித்தும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
தலித் விடுதலை இயக்கம் சார்பில், அதன் மாநில செயலாளர் தலித் ஞானசேகரன் மற்றும் இணைப் பொது செயலாளர் கருப்பையா ஆகியோர் தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் தலித் சமுதய தலைவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் பலர் கலந்து கொண்டனர்.