அம்மா உணவகப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக கவுன்சிலர் அலுவலகம் முற்றுகை
சென்னை: அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்கள் அதிமுக கவுன்சிலர் மீது பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி ஏராளமான பெண்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி 155-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர். இவர் 11-வது மண்டல குழு தலைவராகவும் உள்ளார்.
இந்த மண்டல குழுவின் கீழ் 143 முதல் 155-வது வார்டு வரை உள்ளது. இந்த மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆழ்வார் திருநகர், ராமாபுரம், காரப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் அம்மா உணவகம் உள்ளது.
இங்கு பணியாற்றும் பெண்களிடம் மண்டல குழு தலைவர் சேகர் பாலியல் தொல்லை கொடுக்கிறாப் என்பது இங்கு பணிபுரியும் பெண்களின் புகாராகும்.
இது குறித்து அவர்கள் முதல்வர் மற்றும் மாநகர மேயருக்கு புகார் மனுவும் அனுப்பி இருந்தனர். ஆனாலும் அடங்காத சேகர் தனது சேட்டையை தொடர்ந்துள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த அம்மா உணவக பெண்கள் இன்று காலையில் சேகரை கண்டித்து வளசரவாக்கத்தில் உள்ள மண்டல குழு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் சேகர் இல்லை. அவர் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பெண்கள் கூறினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சேகருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்மா உணவகத்திற்கு அடிக்கடி வரும் போதும், அங்குள்ள பெண்களை அலுவலகத்திற்கு வர சொல்லியும் சேகர் வக்கிரமான வார்த்தைகளால் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவரது எண்ணத்திற்கு உடன்பாடாத பெண்களை சரியாக வேலை செய்யவில்லை என்றும் வேலையை விட்டு நீக்கி விடுவேன்'' என்றும் மிரட்டல் விடுத்தார் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து முதல்வர் மற்றும் மேயரிடம் புகார் கொடுத்தோம். அதை அறிந்த சேகர் யாரிடம் புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மேலும் மிரட்டியுள்ளார். எனவேதான் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களும் தெரிவித்தனர்.
அதிமுக கவுன்சிலர் என்பதால் சாட்டையை சுழற்றுவாரா மக்களின் முதல்வர்.