'ரூபாய்' போதும்... தமிழ்நாடே வேண்டாம்... தலைமைச் செயலர் பதவியை மறுத்த சக்திகாந்த தாஸ்!
தமிழக அரசின் தலைமை செயலர் பதவியை சக்திகாந்த தாஸ் ஏற்க மறுத்திருக்கிறார். இதையடுத்தே கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலராக தாம் விரும்பவில்லை என மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்திகாந்த தாஸ் கூறியிருக்கிறார். இதையடுத்து கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாகிவிட்டார் தலைமை செயலராக இருந்த ராமமோகன்ராவ். அரசியல்வாதிகளுடன் கை கோர்த்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வசமாக சிக்கிவிட்டார் ராமமோகனராவ்.
சிக்கிய ராமமோகன் ராவ்
ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தங்க கட்டிகள், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவரது மகன் விவேக்கும் விசாரணையில் சிக்கியுள்ளார்.
சக்திகாந்த தாஸ்
இதனால் ராமமோகன் ராவ் விடுவிவிக்கப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலராகி உள்ளார். தற்போதைய தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் சீனியர் சக்திகாந்த தாஸ். மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக இருக்கிறார்.
தலைமைச் செயலராக மறுப்பு
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு விவகாரத்தை கையாண்டு வருகிறார். அவரைத்தான் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக நியமிக்க மத்திய அரசு விரும்பியது.
கிரிஜா வைத்தியநாதன்
ஆனால் தாம் பணி ஓய்வு பெற 4 மாதங்கள்தான் உள்ளன; தற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தை கையாண்டு வருகிறேன்.. .ஆகையால் தமிழக அரசின் தலைமை செயலர் பதவியை ஏற்க விரும்பவில்லை எனக் கூறிவிட்டாராம். இதையடுத்துதான் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.