ஒரு ரூபாய் கூட வாங்காமல் என்னை ஐஏஎஸ் ஆக்கியவர் சங்கர்.. தமிழகத்தை உலுக்கிய ஒரு மரணம்!
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மறைவிற்கு தமிழகம் முழுக்க பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மறைவிற்கு தமிழகம் முழுக்க பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மிகவும் பிரபலமான சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு இன்று மிகவும் சோகமான நாள். சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி தமிழகம் முழுக்க பிரபலம். இந்த நிலையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவிற்கு தமிழகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.
[ பரந்து விரிந்த பயிற்சி மையங்கள்.. இனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்? ]
அவரது பேச்சு
அந்த கனீர் குரல்.. அந்த தன்னம்பிக்கை வார்த்தைகள்... அவருடைய பேச்சுக்களையும், வகுப்பில் அவர் பேசுவதையும் அருகில் இருந்து கேட்டவர்களுக்கு தெரியும் அவர் எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார் என்று. ஆனால் அவரை அருகில் இருந்து இத்தனை வருடம் பார்த்தவர்களுக்கு அவரது மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கும். மாணவர்களுக்கு கடைசி வரை தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் மட்டுமே இவர் பேசி வந்தார். இவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார், அந்த அளவிற்கு இவரை எந்த கஷ்டம் புரட்டிப்போட்டது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
தோல்வியில் கூட
மாணவர்களுக்கு என்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களுக்கு உதவ முதலில் வந்து இவர் நின்று இருக்கிறார். ஒருமுறை சிவில் சர்விஸ் தேர்வில் தோற்றால் என்ன, கடைசி வாய்ப்பு வரை முயன்று கொண்டே இரு என்று தன்னம்பிக்கை ஊட்டி கொண்டே இருப்பவர். இப்படித்தான் எல்லா வருடமும் 300க்கும் அதிகமான நபர்களை அரசு பணியாளர்களாக வெற்றி பெற வைத்து இருக்கிறார்.
தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்தார்
ஒரு காலத்தில் சிவில் சர்விஸ் என்றால் வடஇந்தியா மட்டும்தான் என்றிருந்தது. ஆனால் அவர்கள் எல்லோரையும் சென்னையை நோக்கி திருப்பியவர் சங்கர். பல வடமாநில இளைஞர்கள் சென்னையில் வைத்து சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிவில் சர்விஸ் தேர்விற்காக பயிற்சி பெற தொடங்கினர். வெற்றிகளை குவித்தனர். ஆனாலும் இவர் கிராமபுற மாணவர்களுக்கே எப்போதும் முன்னுரிமை கொடுத்தார்.
ஏழைகளுக்கு உதவி
முக்கியமாக ஏழை மாணவர்களுக்கு இவர் இலவசமாக பயிற்சி அளித்தார். இவர் இப்படி இலவசமாக பயிற்சி அளிப்பதை கூட வெளியில் சொன்னது கிடையாது. வெற்றிபெற்ற மாணவர்கள் பத்திரிகைகளில் அதை சொல்லும்போது மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு யாருக்கும் தெரியாமல் உதவினார். இந்தியா முழுக்க தமிழக ஐஏஎஸ் மாணவர்கள் இருக்க வேண்டும் என்று கடைசி வரை உழைத்தார்.
பலர் உருக்கம்
இவரது மறைவிற்கு பல ஐஏஎஸ் அதிகாரிகள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். ஐஏஎஸ் அதிகாரி குலோத்துங்கன் ''என்னை சிவில் சர்விஸ் தேர்விற்கு தயாராக்கியவர் சங்கர்தான். என்னிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் பயிற்சி அளித்து வெற்றி பெற வைத்தார். என்னை மட்டுமில்லை பலருக்கு அவர் இப்படி உதவி உள்ளார். அவரது இழப்பு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு'' என்றுள்ளார்.