தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் ஆனா ரூனா படத்திறப்பு- நல்லகண்ணு, வைகோ பங்கேற்பு
சென்னை: தமிழ் இணையதளங்களின் முன்னோடியான இன்தாம் (intamm.com) என்ற இணையதளத்தை நிறுவிய சவுரிராஜனின் தந்தையும் அண்மையில் மறைந்த தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனருமான நா.அருணாசலம் என்ற ஆனா ரூனாவின் படத்திறப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு, மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழ் இணையத்தின் முன்னோடியான இன்தாம் (Intamm.com) என்ற இணையதளத்தை நிறுவிய சவுரிராஜனின் தந்தை அருணாச்சலம். தமிழ் சான்றோர் பேரவை மூலமாக தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 தமிழர்கள் விடுதலை ஆவதற்கு பெரும் பங்காற்றியவர். அதற்காக தொடங்கப்பட்ட 26 தமிழர்கள் மீட்பு குழுவின் முக்கிய பங்காற்றியவர் அருணாசலம். இந்த மீட்பு குழுவின் நிதிக்காக அருணாச்சலத்தின் மருமகள் மணிமேகலை சவுரிராஜன் தனது தாலியை நிதியாக கொடுத்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
தந்தை பெரியார் தமிழ் இசை மன்றம் மூலமாக தமிழர்களின் பாரம்பரிய இசைகளான நாட்டுபுறப்பாட்டு, பறை உள்ளிட்டவற்றை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நிகழ்ச்சிகளை நடத்தியவர். சென்னையில் அடையார் மாணவர் நகலகம் என்ற பெயரில் பல்வேறு கிளைகளையும் நிறுவியவர்.
மாணவர் புத்தக பண்ணை மூலமாக பல்வேறு நூல்களை வெளியிட்டவர். நந்தன் வழி இதழின் ஆசிரியராகவும் 'ஆனாரூனா' என்ற பெயரில் கட்டுரைகளை எழுதியவர்.
அரசு அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அருணாச்சலம் பின்னர் தொழில் அதிபராகவும் தமிழர் நலன் சார்ந்தும் இயங்கியவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில் மறைந்த அருணாசலத்தின் படத்திறப்பு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு, மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆனா ரூனா குறித்த ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. மேலும் அருணாசலம் ஆசிரியராக இருந்து நடத்திய நந்தன் வழி இதழை மீண்டும் இணைய இதழாக கொண்டு வருவதாகவும் மாணவர் புத்தகப் பண்ணையை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் சவுரிராசன் இந்நிகழ்வில் அறிவித்தார்.