திமுகவுடன் ‘கை’ குலுக்குவோமா என தேர்தலுக்குப் பின் பரிசீலிப்போம்... சசிதரூர் அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் ஆதரவு தேவைப்பட்டால் அது குறித்து பரிசீலிப்போம் என மத்திய இணை அமைச்சர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான சசிதரூர், தென்சென்னை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரமணியை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று சென்னை வந்திருந்தார்.
பிரச்சாரத்திற்கு முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளார்களைச் சந்தித்தார் சசிதரூர். அப்போது அவர் கூறியதாவது :-
இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக...
இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ரூ.4 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இலங்கை எதிரி நாடால்ல...
இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளை எதிரி நாடாக கருத முடியாது. அதே நேரத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் அந்நாட்டு அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தை தொடர்ந்து மத்திய அரசு செய்து வருகிறது.
தமிழக மீனவர் பிரச்சினை...
கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு பிறகு இருநாட்டு மீனவர்கள் இடையே பிரச்சினை இருப்பது உண்மைதான். எல்லைகளை கடந்து மீன்பிடிப்பதில் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதெல்லாம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
திமுகவுடன் மீண்டும் உறவு..?
தி.மு.க.விடம் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆதரவு கோருமா என்ற உங்கள் கேள்விக்கு தேர்தலுக்குப் பின் தான் பதில் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த கட்சிகள் எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுகின்றன என்பதை கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் தி.மு.க.விடம் ஆதரவு கேட்பது குறித்து பரிசீலிப்போம்.
வாக்கு வங்கியை நிரூபிக்க வாய்ப்பு....
தற்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் நல்ல வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். தனியாக வாக்கு வங்கி எவ்வளவு உள்ளது என்பதை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தால்...
கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் சாமானிய மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அடுத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அந்தத்திட்டங்களை எல்லாம் தொடருவார்களா? என்பது சந்தேகம் தான். ஏனென்றால், சாதாரண மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.
குற்றமற்றவர்களுக்கே பதவி...
குஜராத் மாநிலத்தில் மூன்று அமைச்சர்கள் மீது ஊழல் புகார் இருந்தும் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் அரசில் மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வந்தால் உடனடியாக அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். குற்றமற்றவர் என்று நிரூபித்த பிறகே அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படுகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.