அத்வானி தான் அடுத்த ஜனாதிபதியாகனும்...தீவிர அபிமானி சத்ரூகன் சின்ஹாவின் ஆசை
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானியே சிறந்தவர் என்று பாஜக மூத்தத் தலைவர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானியே பொருத்தமானவர் என்று நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான சத்ருகன் சின்ஹா டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. ஜூலை 17ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளர் யார் எனப்து குறித்து சத்ருகன் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ''பாஜகவின் பிதாமகனான அத்வானியே குடியரசுத்தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர். அவர்தான் தகுதி வாய்ந்த, திறமையான, மரியாதைக்குரிய, அனுபவம் வாய்ந்த, பொருத்தமான தலைவர்.
நலன் விரும்பிகள் குரல்
அவர்தான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதில் நம்பிக்கையும் கொண்டுள்ளேன். அத்வானியைப் பின்பற்றுபவர்கள் மற்றும் அவரின் நலம் விரும்பிகளின் குரலாகத்தான் நான் ஒலிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
|
ஓரங்கட்டப்பட்டார்
பாஜகவைச் சேர்ந்தவர்களோ, பாஜகவுக்கு வெளியே இருப்பவர்களோ அத்வானியின் அனுபவத்தோடு போட்டி போட முடியாது. அத்வானி பாஜகவிற்காக ஆற்றிய பணிகளை நாடு அறிந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் பிரதமர் வேட்பாளர் தேர்வின் போதும் ஓரங்கட்டப்பட்டார்.
|
கனவுகளை பின்பற்றுவோம்
அத்வானியின் கனவுகளை நாம் பின்பற்ற வேண்டும். அவர் நீண்ட நாள், ஆரோக்கியமான வாழ்வை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் எப்போதும் செய்ய ஆசைப்பட்டதை நாம் நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார்.
|
நிறைவேறுமா கோரிக்கை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோர் மீது கடந்த மே 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்ருகன் சின்ஹா இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். அத்வானியை தீவிரமாக பின்பற்றி வரும் சத்ருகன் சின்ஹாவின் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.