துண்டு துண்டாக வெடித்து சிதறிய உடல்கள்... திருச்சி வெடி விபத்து சோகம் - பரவும் துர்நாற்றம்
திருச்சி அருகே தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உடல்கள் துண்டு துண்டாக வெடித்து சிதறியதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி: முருகப்பட்டியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை 7 மணிக்கு இதில் ஒரு அலகில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தரைமட்டமாக நொறுங்கியுள்ளது. தற்போது வரை 22 பேர்வரை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இவர்களில் 2 பேர் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. கட்டட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். உள்ளே இன்னும் எத்தனை பேர் இருந்தார்கள், மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை பற்றி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி பெற்று வெடிமருந்து தயாரிக்கும் அதாவது, கிணறுகளுக்கு வைக்கப்படும் தோட்டா, மற்றும் அதற்கு உண்டான மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வெடிமருந்து பொருட்களை உருவாக்கக்கூடிய 15 பிளான்டுகள் உள்ளன. இதில் ஒரு அலகில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தனியார் நிறுவனம் இப்பகுதியில் சுமார் 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மாசுபாடு, சுகாதர சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வெடிமருந்து நிறுவனங்கள் இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விபத்தில் இறந்து போனவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உடல் சிதறி முழுமையான உடல் கிடைக்க முடியாது நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இப்பகுதியில் கடுமையான மழை பெய்து கொண்டிருப்பதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றியுள்ள இடங்களில் மக்கள் யாரையும் நெருங்க விடாமல் போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர். அருகில் உள்ள மற்றொரு அலகு வெடிக்கக்கூடிய அபாயம் உள்ளது என்று அங்கிருப்பவர்கள் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் யாரையும் அருகே விடாமல் போலீசார் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர். அந்த இடங்களில் முற்றிலும் சோதனை செய்யப்பட்டு இடிபாடுகளை நீக்கிய பிறகு உயிரிழப்புகளின் எண்ணிக்கை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்தினால் ரசாயனங்கள் பரவி சுற்றி உள்ள கிராம மக்களுக்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும் வந்து பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.