செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை பணிகள் தீவிரம்: அதிகாரிகள்-மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
செங்கோட்டை: செங்கோட்டை கொல்லம் அகலரயில் பாதை பணியில் கொல்லம் முதல் புனலூர் வரை போக்குவரத்து நடந்து வருகிறது. 2010ம் ஆண்டு செங்கோட்டை முதல் புனலூர் வரையுள்ள 51 கி.மீ. மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பாதை மலைகள் நிறைந்த மிகவும் கடினமான பகுதியாகும்.
சுமார் 350 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட இந்த பணியானது போதிய நிதியில்லாமல் தாமதமாகி வந்தது. இந்நிலையில் கடந்த நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் செங்கோட்டை-புனலூர் ரயில் பாதை அமைக்கும் பணி வேகமெடுத்தது. இந்நிலையில் கேரள மாநிலம் தென்மலை ரயில்வே விடுதியில் வைத்து ரயில்வே அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுநல அமைப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின் கேரள மாநிலம் கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன் கூறுகையில்,
புனலூர்-செங்கோட்டை அகலரயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. தென்மலை-ஆரியங்காவு எல்லை பகுதி மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது இந்த பாதை. செங்கோட்டை முதல் பகவதிபுரம் வரையும், புனலூர் முதல் இடமன் வரையும் ரயில் நிலையங்கள், தண்டவாளம் அமைக்கும் பணிகள், பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன.
இடமன் முதல் பகவதிபுரம் வரை உள்ள பணிகளில் 70 சதவீதம் முடிந்துவிட்டன. இன்னும் 30 சதவீத பணிகள் மட்டுமே இந்த பகுதிகளில் பாக்கியுள்ளது. 25 பாலங்களில் 21 பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. 5 குகைகளில் 3 குகைகளின் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு குகைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றது.
புதியதாக ஒரு குகை அமைக்கும் பணி, ஒரு பாலம் அமைக்கும் பணிக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்குள் இந்த பணியும் தொடங்கும். இருப்பதிலேயே கடினமான பணி இது தான். செங்கோட்டை முதல் புனலூர் வரை சிலிப்பர்கட்டைகள், தண்டவாளங்கள் கொண்டுவந்து போடப்பட்டுள்ளன. ரயில்வே நிர்வாகம் 2017ம் ஆண்டு ஜனவரியில் ரயில் இயக்கம் நடக்கும் என்று தெரிவித்தது. ஆனால் அதற்கு முன் 2016க்குள் பணிகள் முடிந்து ரயில் இயக்கம் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை-புனலூர் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன். இந்த தடத்தில் 5 பிரிவுகள் உள்ளது. இதில் 2 பிரிவுகளின் பணிகள் முடிந்துவிட்டன. புதியதாக ஒரு குகை 12 டிகிரியில் இருந்து 10 டிகிரிக்கு அமைக்கப்படுகிறது. இந்த பணி இன்னும் ஒரு ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்றார்.