தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் வருவதில் சிக்கல்.. 5 கப்பல்கள் தவிப்பு!
தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் துறைமுகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் துறைமுகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதனால் தூத்துக்குடி போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் போராட்டம் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்பதால் இணையதளத்தை முடக்க அரசு நேற்று உத்தரவிட்டது.
இணையதள சேவை முடக்கம்
மாநில உள்துறை உத்தரவை அடுத்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
ஹால்டிக்கெட்
இதனால் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதளங்கள் செயல்படவில்லை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவு செய்யமுடியாமல் திணறி வருகின்றனர்.
5 கப்பல்கள் தவிப்பு
இந்நிலையில் தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 சரக்கு கப்பல்கள் துறைமுகம் வரமுடியாமல் திணறியுள்ளன.
சென்னை, கொச்சி வழியாக
இதனால் தூத்துக்குடி துரைமுகத்தில் இருந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 5200 சரக்கு பெட்டகங்களை ஏற்றுமதி இறக்குமதிக்காக கையாளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை, கொச்சி வழியாக சரக்கு பெட்டகங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.