மெரீனா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றம் - ரசிகர்கள் சோகம்
மெரீனா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர்.
சென்னை: மெரீனா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டு மணிமண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை சென்னை மெரினா காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில், சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கு தமிழக அரசு போதிய அவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டது. சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணி முடிவடையாத காரணத்தால் இதுநாள் வரை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்படவில்லை.
சிவாஜி மணிமண்டபம் கட்டப்படுவதால் அங்கு சிலையை வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அரசு கூறியதை ஏற்று நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
இந்நிலையில் புதன்கிழமையன்று நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிவாஜி சிலையைஅகற்றும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத இயந்திரங்கள் மூலம் சிலையை வெட்டி எடுத்து லாரியில் ஏற்றி மணிமண்டபம் கட்டப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விடிய விடிய நடைபெற்ற இந்த பணியால் மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடற்கரை சலையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சிவாஜி சிலையை நள்ளிரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சிவாஜி சிலை அகற்றப்பட்டதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.