ஜெயலலிதாவுக்கு கொடுத்த ஸ்டீராய்டு மாத்திரையால்தான் உடல்நலம் பாதித்தது : அக்குபஞ்சர் டாக்டர்
ஜெயலலிதாவுக்கு அதிக அளவு ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டதாலேயே உடல்நலம் பாதித்தது என்று அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதிக்கும் முன்பு அதிக அளவிற்கு ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அவரது உடல்நலம் பாதித்தது என்று அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் பரபரப்பை பற்ற வைத்துள்ளார். விசாரணை ஆணையத்திடம் இன்று விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் சங்கர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அதுபற்றி உண்மை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தில் மனு அளித்தவர்களையும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்து இருந்தார்.
ஊடல் நலம் பாதிக்கப்பட்டது ஏன்?
அதன்படி அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார். ஸ்டீராய்டு மருந்துகள் அதிக அளவில் தந்ததால்தான் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என விசாரணை ஆணையத்தில் கூறியுள்ளார்.
அதிக அளவு ஸ்டீராய்டு மாத்திரை
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சங்கர்,ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதும் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டுள்ளது. அவரது முகத்தை பார்த்தாலே தெரியும். இது கால்வலிக்காக தரப்படும் மாத்திரையாகும்.
உடல் நலம் பாதிக்க காரணம்
அந்த ஸ்டீராய்டு மருந்து சற்று அதிக அளவில் கொடுக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகத்தான் ஜெயலலிதாவின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது இதனை விசாரணை ஆணையத்தில் கூறியுள்ளேன் என்றும் டாக்டர் சங்கர் தெரிவித்தார்.
திடீர் திருப்பம் தரும் சாட்சியம்
ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவருடைய மரணம் நிகழ்ந்தது. இந்த மரணம் குறித்த விசாரணையில் டாக்டர் சங்கர் அளித்துள்ள சாட்சியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை ஆணையத்தில் தீபா
நாளைய தினம் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவிடமும், நாளை மறுநாள் தீபக்கும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர். 15ம் தேதி தீபா கணவர் மாதவன் ஆகியோர் விசாரணை கமிஷன் முன் ஆஜராகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விசாரணை நடத்துவதற்காக காலக்கெடு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.