சிவமூர்த்தியை கொன்று உடலை காரிலேயே 2 நாட்கள் வைத்து சுற்றிய கொலையாளிகள்.. திடுக் தகவல்கள்!
சிவமூர்த்தியை கொன்று உடலை காரிலேயே வைத்துக்கொண்டு கொலையாளிகள் 2 நாட்கள் சுற்றியுள்ளனர்.
Recommended Video
ஆம்பூர்: சிவமூர்த்தியை கொன்று உடலை எங்கே வீசுவது என தெரியாமல் காரிலேயே வைத்துக்கொண்டு கொலையாளிகள் 2 நாட்கள் சுற்றியுள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் தொழிலதிபர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் திடீரென மாயமானார். இந்நிலையில் நேற்றிரவு ஆம்பூர் டோல்கேட்டை சொகுசு கார் ஒன்று 4 முறை கடந்து சென்றுள்ளது.
ரோந்து பணி
இதனால் சந்தேகமடைந்த டோல்கேட் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சொகுசு கார் சென்றதாக கூறப்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஓட்டம்பிடித்தனர்
அப்போது ஆம்பூர் பகுதியில் சொகுசு கார் கேட்பாரற்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை கண்ட போலீசார், அதன் அருகில் சென்றுள்ளனர். போலீசார் வருவதை கண்டு காரின் அருகில் நின்ற 3 பேர் ஓட்டம்பிடித்துள்ளனர்.
திடுக்கிடும் தகவல்
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எங்கே வீசுவது?
அதாவது திருப்பூர் தொழிலதிபர் சிவமூர்த்தியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தியதாகவும், காரிலேயே வைத்து அவரை கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது உடலை எங்கே வீசுவது என்று தெரியாமல் திணறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
உடலுடன் 2 நாட்கள்
2 நாட்கள் உடலை காரிலேயே வைத்து சுற்றியதாகவும் பின்னர் கெலவரப்பள்ளி அணை அருகே உடலை வீசிவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர்.மேலும் தாங்கள் பயன்படுத்தும் இந்த கார் கொலை செய்யப்பட்ட சிவமூர்த்தியுடையது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் உடலை கண்டுபிடித்துள்ளனர். அது கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் சிவமூர்த்தி உடையதுதானா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.