சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி கையை முறிக்கும் அராஜக போலீஸ்- வீடியோ!
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது மாணவி ஒருவரின் கையை போலீசார் முறிக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை : ஐஐடி வளாகத்தில் தாக்கப்பட்ட மாணவருக்காக நியாயம் கோரி போராடியவர்களில் பெண் ஒருவரின் கையை முறித்து போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் சூரஜ் மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்தியதால் கொடூரமாக தாக்கப்பட்டார். பார்வை இழக்கும் அளவிற்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ள சூரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இயக்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியிலுள்ள ஐஐடி வளாக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்கள் என்றும் பாராமல் போலீசார் தரதரவென சாலையில் இருந்து இழுத்து சென்றும், குண்டுகட்டாக தூக்கிச் சென்றும் காவல்துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.
#BREAKING - A constable breaks hand of a student protester over beef row #CampusBeefWar pic.twitter.com/kQIEVKZJqi
— News18 (@CNNnews18) May 31, 2017
அப்போது மயங்கி விழுந்த மாணவி ஒருவரை இரண்டு போலீசார் நெருக்கித் தள்ள பின்னால் இருந்த பெண் காவலர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் கையை முறிக்கிறார். சோர்ந்து விழுந்த பெண்ணை தூக்கிப் பிடிக்காமல் தனது அராஜக போக்கை கட்டவிழ்த்து விடும் விதமாக பெண் காவலர் செயல்பட்ட அதிர்ச்சி வீடியோவை பலரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.