மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு... சேலத்தில் பரபரப்பு
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சேலத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. இதுதொடர்பாக மாணவர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு படித்து வந்த மாணவர் முத்துகிருஷ்ணன் கடந்த திங்கள் அவரது நண்பரின் அறையில் தூக்கியில் தொங்கியது கண்டுபிடிக்க்பபட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது உடலில் காயங்கள் ஏதும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள் முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலைதான் என அறிவித்தனர். இதையடுத்து நேற்றிரவு அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி
அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துக்கிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுவதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார்.
செருப்பு வீச்சு
அப்போது ஒருவர் அமைச்சர் மீது செருப்பை வீசினார். அதிர்ஷ்டவசமாக அந்த செருப்பு அவருக்கு முன் அமைக்கப்பட்டிருந்த மைக் மீது பட்டது. இதையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மரணம் தொடர்பாக விசாரணை
இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அரசியல் கட்சியினர்தான் காரணம்
செருப்பு வீச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அரசியல் கட்சியினர் தான் இதற்கு காரணம் என பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் செருப்பை வீசியவர் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.