நடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு.. திருவாடனையில் பரபரப்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்களுக்கு எதிர்ப்புகள் நீடித்து வரும் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் காரின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் செருப்புகளை வீசியுள்ளனர்.
ராமநாதபுரம்: நடிகரும் திருவாடனை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, ஓபிஎஸ் அணி சசிகலா அணி என உடைந்ததை தொடர்ந்து சில எம்.பி., எம்.எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறினர். அப்போது சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்தவர்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் சரமாரியாக வசைபாடினர்.
இதனால் கருணாஸ் சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை கமிஷனர் ஆபிஸில் புகார் அளித்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாடனை தொகுதியில் தனக்கு எதிராக 2 லட்சம் பேர் உள்ளதாக கூறினார்.
அதில் தனக்கு ஓட்டு போட்டவர்கள் 75000 பேர்தான் என்றும் தனக்கு ஓட்டு போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என்றும் கருணாஸ் தெரிவித்தார். ஏற்கனவே கருணாஸ் சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் திருவாடனை தொகுதி மக்கள் கொதிப்பில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று தனது தொகுதியான திருவாடனைக்கு சென்ற கருணாஸ் அங்கிருந்து புறப்படும் போது சாலையில் இருந்த ஒரு சமுதாய தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த சில நபர்கள் கருணாஸின் கார் மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கருணாஸ் போலீசில் புகாரளித்தார். அவரது புகாரையடுத்து செருப்புகளை வீசிய மர்ப நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.