தமாகாவிலிருந்து 'எஸ்கேப்பான' வேலூர் தொழிலதிபர் முனிரத்னம் சோளிங்கர் வேட்பாளர் ஆனார்!
சென்னை:வாசனின் கூட்டணி முடிவால், அதிருப்தியுற்று தமாகாவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸுக்கே சென்ற வேலூர் தொழிலதிபர் முனிரத்னம் சோளிங்கர் தொகுதி காங். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் தமாகாவும் இணைந்துள்ளது. அக்கூட்டணியில் தமாகாவிற்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், தமாகாவின் இந்த முடிவு அக்கட்சித் தலைவர்களில் சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால், தமாகாவில் இருந்து விலகி வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் முனிரத்தினம் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களோடு போய் சேர்ந்தார். இதேபோல், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் போன்றோரும் தமாகாவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸிற்கே திரும்பினர்.
இவர்களில் முனிரத்னத்தைத் தற்போது சோளிங்கர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ். தொழிலதிபரான இவர், கடந்த சட்டசபைத் தேர்தலின் போதே சோளிங்கர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு தராமல், முன்னாள் எம்.எல்.ஏ அருள்அன்பரசுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த முனிரத்னம், அதே தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினர்.
இத்தேர்தலைப் போலவே, அம்முறையும் காங்கிரஸ் திமுகசுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனபோதும், காங்கிரஸ் வேட்பாளர் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிகவிடம் தோல்வி அடைந்தார். இதற்குக் காரணம் சுயேட்சையாக அதே தொகுதியில் களமிறங்கி வாக்குகளைப் பிரித்த முனிரத்னம் தான்.
இந்த சூழ்நிலையில் தான் வாசனோடு காங்கிரஸில் இருந்து வெளியேறி, தற்போது மீண்டும் கட்சியில் இணைந்த முனிரத்னத்திற்கு சோளிங்கர் பகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அத்தொகுதியில் இப்போதே காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்டதாக அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.