குற்றாலத்தில் நெருங்கும் சீசன்.. ஏலம் போகாமல் வெறிச்சோடி கிடக்கும் கடைகள்.. வியாபாரிகள் கவலை!
குற்றாலத்தில் சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில் கடைகள் ஏலம் எடுக்கப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்
நெல்லை: குற்றாலத்தில் சீசன் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில் கடைகள் ஏலம் எடுக்கப்படாமல் உள்ளன. இதனால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் நன்றாக இருக்கும். தற்போது அதற்கு முன்னோட்டமாக இதமான காற்று வீசுகிறது.
ஜூன் முதல் வாரத்தில் பருவமழை துவங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. குற்றாலத்தில் சீசன் காலத்தில் வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சன்னதி பஜார், வடக்கு சன்னதி, ரத வீதிகள் ஆகியவற்றில் கடைகள், உணவு விடுதிகள் நடத்துவதற்காக 90 நாட்களுக்கு ஏலம் விடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு சீசன் பொய்த்ததால் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் நஷ்டம் அடைந்தனர். இதனால் இந்தாண்டு இதுவரை மூன்று முறை ஏலம் நடத்தியும் 20 கடைகளே ஏலம் போய் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக இந்த சமயத்தில் குற்றாலத்தில் தற்காலிக கடைகளின் பணிகள் நடந்து முடிந்திருக்கும். இந்த ஆண்டு ஏலம் போகாததால் தற்காலிக கடைகள் போடும் பணி மந்த கதியில் நடந்து வருகிறது.
இந்த ஆண்டும் சீசன் நீடிக்குமா அல்லது பொய்து போகுமா என்று தெரியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனால் கடைகளை ஏலம் எடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.