ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை சோழவந்தானில் கடைகள் அடைப்பு!!!
மதுரை: மதுரை சோழவந்தானில் 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சோழவந்தான் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை மாவட்டம் முழுவதும் தீவிரப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சோழவந்தானில் வியாபாரிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் கடைகளை அடைத்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும் பீட்டா அமைப்பை தடைசெய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்துக்கு திரைத்துறையினர், ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், லாரி ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை - சோழவந்தானில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் ஜல்லிக்கட்டுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சோழவந்தானில் நடைபெறும் கடையடைப்பு காரணமாக அப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.