சுனாமி நினைவு தினம்: வேளாங்கண்ணியில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு
வேளாங்கண்ணி: சுனாமியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேளாங்கண்ணியில் ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
சுனாமி பேரழிவு நடந்ததன் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று. இந்திய அளவில் சுனாமியால் அதிக பாதிப்புக்குள்ளானது தமிழகம். அதிலும் குறிப்பாக நாகை மாவட்டத்தில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. இங்கு மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுனாமிக்கு பலியானார்கள். சுமார் ரூ. 733 கோடி மதிப்பிலான சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், 10ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணியில் கடைகள் அமைத்து வியாபாரம் மேற்கொண்டு வரும் வணிகர்கள் இன்று தங்களது கடைகளை அடைத்து பலியானவர்களுக்கு தங்களது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவியும் இடங்களில் ஒன்றான வேளாங்கண்ணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டுள்ளதால் கடைவீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இது தவிர சுனாமியில் பலியானவர்களை நினைவு கூரும் விதமாக கடற்கரைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், கடல் நீரில் மலர்கள் தூவியும், பால் ஊற்றியும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.