இன்ஸ்பெக்டர் இல்லாத தூத்துக்குடி காவல்நிலையங்கள்: கூடுதல் பணிச்சுமையால் போலீஸார் திண்டாட்டம்!
இன்ஸ்பெக்டர் இல்லாத தூத்துக்குடி மாவட்ட காவல்நிலையங்களால் போலீஸார் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருப்பதால் போலீசார் பணிச் சுமையால் திண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழு மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 49 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தூத்துக்குடி மாவட்டக் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர், முத்தையாபுரம், குலசேகரப்பட்டிணம், புதுக்கோட்டை, வடபாகம் குற்றப்பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்து வருகிறது.
இப்பணியிடங்களை அருகில் உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கூடுதலாகக் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் எட்டயபுரத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பாளை காவல் நிலையத்துக்கும், தூத்துக்குடி மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் நெல்லை நகரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஏற்கனவே ஏகப்பட்ட இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பபடாமல் காலியாக உள்ள நிலையில் மேலும் 5 பேரை பணியிட மாற்றம் செய்துள்ளதால் காவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் பொறுப்பு இன்ஸ்பெக்டர்கள் நான்கு முதல் ஐந்து காவல் நிலையங்களை கூடுதல் சுமையாக கவனித்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, நகை திருட்டு, செயின் பறிப்பு புகார்களில் கவனம் செலுத்த முடியாமல் காவலர்கள் திணறி வருகின்றனர்.