போதிய வெங்காய விளைச்சல் இல்லாததால் மகாராஷ்டிராவிடம் கையேந்தும் நிலையில் தமிழகம்!
தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாதாதால் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.
சென்னை: பல்லாரி வெங்காய விளைச்சல் இல்லாததால் மகராஷ்டிராவிடம் இருந்து வருவதை மட்டுமே தமிழக வியாபாரிகள் எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே, சிறு வெங்காயம் எனப்படும் உள்ளி விலை உயர்வு காரணமாக பலரும் பல்லாரி மற்றும் மலை பல்லாரியை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மழை பெய்தும் விளைச்சல் குறைந்துள்ளதால் பல்லாரி விலையும் ஏறி கொண்டே போகிறது. நெல்லை தச்சநல்லூரில் இன்று காலை நிலவரப்படி உள்ளி முதல் தரம் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது.
இது போல் சிட்டுள்ளி எனப்படும் சிவப்பு நிற வெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இது சில்லரை விற்பனை கடைகளில் கூடுதலாக ரூ.20 வரை வைத்து விற்கப்படுவதால் ரூ.160 வரை விலை கொடுத்து பொது மக்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காய்கறி விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், தமிழகத்தில் உள்ளூர் வெங்காயம் வரத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே நின்று விட்டது. சிவகாசி, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வெங்காய வரத்து இல்லை. கர்நாடகா மாநிலத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக விலை உயர்வும் தொடர்ந்து வருகிறது. தற்போது மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் வரத்து இருக்கிறது. இப்போதைக்கு வெங்காய விலை குறைய வாய்ப்பு இல்லை. ஜனவரிக்கு பிறகு உள்ளூர் வெங்காயம் வர வாய்ப்பு உள்ளதால் அப்போதுதான் விலை குறையும் என்று தெரிவித்து உள்ளனர்.