அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் எது தெரியுமா?
சென்னை: அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். அதுதான் அட்சய திருதியை தினத்துக்கு உரிய நன்மையைத் தரும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு நாளை திங்கட்கிழமை அட்சய திருதிகை கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கும் நாள் என்ற எண்ணம் பெண்கள் மனதில் பதிவாகி விட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த எண்ணம் யாருக்கும் வந்ததில்லை. இன்றைக்கு அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்குவது என்பது மோகமாக கூட மாறி விட்டது.
அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும்.
அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம்.
இந்நாளில் இறைவா உண்டு மகிழ்வாயாக என வேண்டினால் இறைவனே உணவை ஏற்று நம்மை ஆசீர்வதிப்பார் என்பது ஐதீகம். எனவே மற்ற நாட்களில் படைப்பதை விட அட்சய திருதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.
நகை வாங்கும் பழக்கம்
அட்சய திருதியை தினத்தன்று நகை வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்று யாரோ ஒருவர் சொல்ல அது பரவி சமுதாய பழக்கமாக மாறிப்போய் விட்டது. எல்லாம் விளம்பரங்கள் படுத்தும் பாடுதான்.
நல்ல நேரத்தில் வாங்கலாம்
பெரும்பாலானவர்கள் அட்சய திருதியை தினத்தன்று நகை வாங்குவதை இறைவழிபாட்டின் ஒரு அங்கமாகவே மாற்றி விட்டனர்.
எனவேதான் அட்சய திருதியை தினத்தன்று நல்ல நேரத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்ற நினைப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
மங்களகரமான நேரம்
அட்சய திருதிகை நாளில் ஒரு குறிப்பிட்ட மங்களகரமான நேரத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் தோன்றியுள்ளது. அந்த நேரத்தில் தங்க நகைகள் வாங்குவதற்கு முன்பதிவும் செய்கிறார்கள். அந்த நல்ல நேரத்தை அறிவது எப்படி?
குரு - சுக்கிரன்
தங்கம் மற்றும் நகையை இரு கிரகங்களின் அம்சமாக கொள்ளலாம். அதாவது மஞ்சள் நிறமான தங்கம் குரு கிரகத்தை காட்டுகிறது. தங்கத்தில் இருந்து செய்யப்படும் நகைகள் சுக்கிரனை குறிக்கிறது. எனவே அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். அதுதான் அட்சய திருதியை தினத்துக்கு உரிய நன்மையைத் தரும்.
திங்கட்கிழமை நல்ல நேரம்
இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று குரு ஹோரையானது காலை 8 மணி முதல் 9 மணி வரையும், பிறகு மாலை 3 மணி முதல் 4 மணி வரையும் உள்ளது. அதுபோல் சுக்கிர ஹோரையானது அன்றைய தினம் பகல் 11 மணி முதல் 12 மணி வரை உள்ளது. இந்த ஹோரை நேரங்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு உகந்த நேரமாகும்.