வந்துட்டாருயா தினகரன்... தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?... ஜெயக்குமார் பதவிக்கும் ஆப்பு!
தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என்று தெரிகிறது.
சென்னை: தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளதால் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம். அதேவேளையில் தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த அமைச்சர் ஜெயக்குமாரின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிகிறது.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் தினகரன் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த 1-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பல முறை ஜாமீன் பெற முயற்சித்தும், அவரது மனு மீதான விசாரணை தள்ளி போய் கொண்டே இருந்தது. இதனிடையே, அதாவது தினகரன் சிறைக்கு செல்வதற்கு முன்னரே இரட்டை இலையை பெற அதிமுகவில் பிளவுப்பட்டுள்ள இரு அணிகளும் ஒன்று சேர இரு அணிகளும் விரும்பின.
பேச்சுவார்த்தையில் சிக்கல்
இரு அணிகளும் இணைய வேண்டும் என்றால் தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒதுக்கி வைப்பதாக அறிவிப்பு
இந்நிலையில் தினகரனையும், சசிகலாவையும் கட்சியின் நலன் கருதியும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கூட்டாக அறிவித்தனர். மேலும் தினகரன் சிறை சென்றது குறித்து அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேட்டபோது, இது அவரது தனிப்பட்ட விவகாரம். அவர் மீதான வழக்கை அவர்தான் சந்திக்க வேண்டும். இதில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றார்.
சசிகலாவின் பேனர்கள் அகற்றம்
இணைப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் கட்சி தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பேனர்களை நீக்க வேண்டும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து சசிகலாவின் பேனர்கள் நீக்கப்பட்டன. இதனால் சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இரு அணிகளின் தலைவர்களும் கூறிய மாறுபட்ட கருத்துகளால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
கூவத்தூர் உறுதிகள்
இதனிடையே கூவத்தூரில் உறுதியளித்தபடி, எம்எல்ஏ-க்கள் பணம், பதவி, பரிசுப் பொருள்கள் ஆகியன இன்னும் வழங்கப்படவில்லை என்பதால் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் ரகசிய கூட்டங்களை நடத்தி வந்தனர். ஏற்கெனவே சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என்றிருந்த நிலையில் பத்து பத்து எம்எல்ஏ-க்கள் வீதம் தோப்பு வெங்காடசலம், தமிழ்செல்வன் உள்ளிட்டோரும் தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.
தினகரனுக்கு ஜாமீன்
இந்நிலையில் தினகரனுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று சென்னை வந்தடைந்தார். கூவத்தூரில் கூறியது போல் சில சமூகத்து எம்எல்ஏ-க்கள் உறுதியளித்தப்பட்ட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமியிடம் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கேட்டுகொண்டும் அது நடைபெறாத நேரத்தில் தற்போது தினகரன் என்ட்ரி ஆகியிருக்கிறார்.
மௌனத்தில் அமைச்சர்கள்
இத்தனை நாட்கள் தினகரனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த அமைச்சர்கள் தற்போது அமைதி காத்து வருகின்றனர். அவ்வளவோ பேச்சு பேசிய அமைச்சர் ஜெயகுமாரும் நேற்று டெல்லியில் தினகரன் அதிமுகவில் தொடர்பாது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அதுகுறித்து வழிகாட்டுதல் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து விட்டு சென்றார். ஆனால் அந்த குழு யார் என்று அவர் சொல்லாமல் சென்றுவிட்டார்.
பயத்தையே காட்டுகிறது
இதுகுறித்து தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், எடப்பாடிக்கு அமைச்சர்கள் ஆதரவு இருந்தாலும், தினகரனுக்கு எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது. தற்போது தினகரன் வெளியே வந்துள்ள நிலையில் அதிருப்தி எம்எல்ஏ-க்களை சமாதானப்படுத்தும் நோக்கில் அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது அமைச்சர்கள் ஏதும் கருத்து தெரிவிக்காதது தினகரன் மீதான பயத்தையே காட்டுகிறது. அமைச்சர் ஜெயகுமாரின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தனர்.