கர்ப்பிணியை காலால் உதைத்துக் கொன்ற ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட்
கர்ப்பிணி சென்ற பைக்கை காலால் எட்டி உதைத்து அவர் சாவுக்கு காரணமான ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Recommended Video
திருச்சி: திருச்சியில் கர்ப்பிணி சென்ற பைக்கை காலால் எட்டி உதைத்து அவர் உயிரிழக்க காரணமான ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
உஷா 3 மாத காப்பிணி. போலீஸார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனத்தை எட்டி உதைத்த காமராஜ் தப்பியோடிவிட்டார்.
இந்நிலையில் காமராஜ் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை உஷாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பெண் உயிரிழக்க காரணமான காமராஜை திருச்சி மத்திய மண்டல் ஐ.ஜி. வரதராஜு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.