சித்த மருத்துவ படிப்புக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்
சித்த மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் நாளை தொடங்குகிறது
நெல்லை:சித்த மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு இழுத்தடிக்கப்பட்ட நிலையில் நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவம் முதல் பொறியியல் வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. பருவ தேர்வுகளும் தொடங்கும் நிலையில் உள்ளன. ஆனால் சித்த மருத்துவ படிப்பில் மட்டும் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இழுத்துகொண்டே போனது. சித்த மருத்துவ படிப்பில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, .யுனானி, யோகா, நேச்சுரபதி உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் மருத்து படிப்புக்கு 100 இடங்களும், சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்கலும் உள்ளன. இது தவிர நாகர்கோவில், கோட்டார், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் உள்ளன. சித்த மருத்துவ படிப்புக்கு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி் முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
வழக்கமாக அக்டோபர் மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு உடனடியாக வகுப்புகளும் தொடங்கப்பட்டு விடும். இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டதோடு நின்று விட்டது. கலந்தாய்வு எப்போது நடக்கும், எப்போது வகுப்புகள் தொடங்கும என தெரியாமல் மாணவர்கள் திண்டாடி வந்தனர். இதில் பலரும் வேறு துறையை தேர்வு செய்து படிக்க போய் விட்டனர். இந்நிலையில் திடீரென கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கலநதாய்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2830 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.