3 மாணவிகள் தற்கொலை: கல்லூரி தாளாளர் வாசுகி போலீசில் சரண், முதல்வரை சிறையில் அடைக்க உத்தரவு
விழுப்புரம்: சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்த வழக்கில் கல்லூரி தாளாளரின் மகன் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கட்டணம் மட்டும் அதிகமாக வாங்கி, தங்களை கொடுமைப்படுத்தியதாகக் கூறி மாணவிகள் கடிதம் எழுதி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி தாளாளர் வாசுகி சுப்பிரமணியனின் மகன் சுவாக்கர் சர்மாவை கைது செய்தனர். மேலும் கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டார்.
சுவாக்கர் சர்மா, கலாநிதி ஆகியோர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் விடுதி வார்டன் லட்சுமி(37), விடுதி பணியாளர்கள் சுமதி(34), கோட்டீஸ்வரி ஆகியோரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கல்லூரியின் தாளாளர் வாசுகி இன்று தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இதற்கிடையே மாணவிகள் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாகவும் அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் மூன்று பேரின் பின் மண்டையில் பலத்த காயம் இருப்பதால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்களின் பெற்றோர்.