நிலவேம்பு குறித்த தவறான தகவல் - சித்த மருத்துவ அமைப்பினர் விளக்கம்
நிலவேம்பு கசாயம் அருந்துவதால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்று தவறான தகவல் பரவி வரும் நிலையில் சித்த மருத்துவ அமைப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.
நெல்லை: நிலவேம்பு குடிநீர் அனைத்து வித காய்ச்சலையும் குணப்படுத்தும் என சித்த மருத்துவ அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் சித்த மருத்துவ நண்பர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜோசப் தாஸ் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது, நிலவேம்பு குடிநீர் பற்றிய விவாதங்களால் தமிழக மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. நிலவேம்பு என்ற மூலிகை சித்த மருத்துவம் மட்டுமல்லாது எல்லா வித மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த எளிய மூலிகை பற்றி டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் வங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலவேம்பு, சீரகம், ஏலக்காய் கொண்டு தயாரித்த ஆலூயி என்ற மருந்து வீட்டுக்கு வீடு பயன்படுத்தப்படும் மருந்தாக இருந்து வந்துள்ளது. நிலவேம்பு குடிநீரை தொடர்ந்து பருகுவதால் மலட்டு தன்மை ஏற்படும் என்பது தவறான தகவல்.
நிலவேம்பு யாருக்கும் சொந்தமான மூலிகை இல்லை. யாரும் பயன்படுத்தலாம். தவறான கருத்துகள் மூலம் நிலவேம்பின் பயன்பாட்டை ஓடுக்குகின்றனர். இந்த குடிநீரை மூன்று மணி நேரத்தில் பயன்படுத்தி விட வேண்டும். அதன்பிறகு வேறு புதிதாகதான் காய்ச்ச வேண்டும். இதனால் இதை குடிநீராக மற்றும் எடுத்து கொள்ளாமல் மருந்து, மாத்திரை, டானிக் போன்ற வடிவிலும் தயாரிக்க ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றார் அவர்.