திராவிடம்தான் தென்னிந்திய மக்களின் அடையாளம்.. விட்டுக் கொடுக்காமல் வாதிடும் நடிகர் கமல்
விந்திய மலையில் இருந்து தென்னிந்தியா முழுவதும் பரவி வாழ்வது திராவிடர்கள்தான் என்று தொல்லியல் ஆய்வு ரீதியாகவும் இன ரீதியாகவும் அழுத்தமாக சொல்ல முடியும் என்று நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக நடிகரான கமல் ஹாசன் திராடம், திராவிடர் குறித்து ஆதாரத்தோடு உறுதியோடு பேசி வருகிறார். திராவிடம் என்பது குறிப்பிட்ட தொல்குடி மக்களின் அடையாளம் என்றும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
அரசியல் குறித்து அதிகம் பேசாமல் சினிமா, நடிப்பு குறித்து அதிகம் பேசி வந்த நடிகர் கமல் ஹாசன் சமீப காலமாக அரசியல் குறித்து அதிகம் பேசி வருகிறார். குறிப்பாக திராவிடத்தை விட்டுக் கொடுக்காமல் அதில் உள்ள நியாயமான வரலாற்று சான்றுகளை எடுத்துக் கூறி பேசி வருகிறார்.
இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழகம் எதற்காக தலைவர்களை எதிர்ப்பார்க்க வேண்டும். தலைவர்களை தேடுவது கட்சிகளின் வேலை. மக்கள் நல்ல தேர்தல் அறிக்கைகளையும், சிறந்த நிர்வாகத்தையும் தான் எதிர்ப்பார்க்க வேண்டும். கட்சிகள் என்ன சொல்கிறது என்று நாம் பார்ப்பதில்லை. காந்தி காலத்தில் இருந்து நாம் ஆளுமைகளை மட்டுமே பார்க்கிறோம். காந்தியை பிடித்துப் போய் மக்கள் அவர் பின்னால் சென்றார்கள்.
தேசிய கொடி
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. மத்தியில் ஆள்பவர்கள் தமிழகத்தை கவனித்தாக வேண்டும். என்னைப் பொறுத்தவரை தேசியக் கொடியை நான் வணங்குகிறேன். மற்ற நிறங்கள் எனக்கு பெரிதாகப் படுவதில்லை. அவைகள் எல்லாம் வானத்தில் வந்து மறையும் மேகங்கள்.
திராவிட அரசியல்
தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலை பாஜக பயன்படுத்த முயல்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டு காலமாக உள்ள திராவிட அரசியலை தமிழக மக்கள் தூக்கிப் போடமாட்டார்கள். அது ரொம்ப கஷ்டம்.
திராவிடர்கள்
திராவிடர்கள் என்பது தமிழகத்திற்கு இன்னும் தொடர்புடைய ஒன்றாகவே இருக்கிறது. நான் இதை அரசியலாக சொல்லவில்லை. தொன்மம் வாய்ந்த இனக் குழு மக்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். தொல்லியல் ஆய்வு மற்றும் இன அடிப்படையிலான சான்றுகள் என அனைத்தும், விந்தியமலைக்கு அடுத்து உள்ளவர்கள் திராவிடர்கள் என்றே கூறுகிறது.
அடையாளம்
அரசியல் சட்ட மேதை அம்பேத்கர், சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி, காந்தி ஆகியோர் திராவிடம் குறித்து பேசி இருக்கிறார்கள். ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். அவரும் இதுகுறித்து பேசி இருக்கிறார். அதைத்தான் நானும் சொல்கிறேன். இது ஏதோ திராவிடத்திற்கு ஒரு இடத்தை கொடுத்துவிட்டு போகும் செயலல்ல. இதுதான் அடையாளம்.
மாற்றம் அவசியம்
தமிழகம் 40 ஆண்டுகளாக மாற்றத்திற்காக காத்திருக்கிறது. எத்தனைப் பேர் கூவத்தை சுத்தம் செய்வதாக உறுதியளித்தார்கள்? எத்தனை ஆட்சிகள்? நாம் அதனை மேலும் மேலும் அழுக்காகிக் ஒரு குட்டை போல் ஆக்கி வைத்திருக்கிறோம். ஒரு மாநிலத்தின் தலைநகரில் ஓடும் நதி கொள்ளை நோய் பரப்பும் கூடமாக கிடக்கிறது.
ஹாலிவுட்
இந்தியாவில் தொலைக்காட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள், திறமைக்கான நிகழ்ச்சிகள், தொடர்கள் என அனைத்தும் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகளாகவே இல்லை. ஹாலிவுட்டின் நடப்பது போன்று இங்கும் பல மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.