திருட்டுத் தொழிலில் "டயமன்ட் ஜூப்ளி" கண்ட "சில்வர்" சீனு.. 200-ஆவது முறையாக கைது!
கொள்ளை தொழிலில் சில்வர் சீனுவாசன் தாத்தா வைர விழா காணும் அவர் இன்று 200-ஆவது முறையாக கைது செய்யப்பட்டார்.
Recommended Video
சென்னை: கொள்ளைத் தொழிலில் 50 ஆண்டுகளாக கொடி கட்டி பறந்த சில்வர் சீனுவாசன் தாத்தாவை போலீஸார் இன்று 200-ஆவது முறையாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்கி 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து அதற்கேற்ப விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் திருட்டு, கொள்ளை தொழிலுக்காக வைர விழா கொண்டாடுபவர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா.
அவர்தான் சில்வர் சீனுவாசன் தாத்தா (80). அதுபோல் எந்த தொழில் செய்தாலும் ஓய்வு என்ற ஒன்று உண்டு. ஆனால் சில்வர் தாத்தா செய்யும் தொழிலுக்கு ஓய்வே இல்லை. அப்பாவியான தோற்றத்தை வைத்து இத்தனை நாட்கள் போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார்.
வித்தியாசமான திருட்டு
இவர் சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடுவது வழக்கம். இவற்றை திருடிக் கொண்டு லாபகமாக தப்பிவிடுவதுதான் தாத்தாவின் மாஸ்.
எந்த மாதிரியான திருட்டு
நடிப்பதில் அவருக்கு ஏற்ப ஒரு ஸ்டைல் உள்ளதுபோல் திருடுவதிலும் தாத்தாவுக்கு ஒரு ஸ்டைல் உள்ளது. கடப்பாரையை பயன்படுத்தி திருடுவது, பீரோ புல்லிங், பெண்களிடம் இருந்து செயின் பறிப்பு, வீடுகளுக்குள் தண்ணீர் கேட்பது போல் திருட்டு என திருடர்கள் தங்கள் கைவசம் உள்ள ஐடியாக்களை கசக்கி பிழிந்து திருட்டுத் தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.
பரிகார பூஜை
மேற்கண்ட திருட்டு ஸ்டைலில் இருந்து சற்றே வித்தியாசமான சில்வர் தாத்தா, ஜோதிடம், ஜாதகம் மற்றும் பரிகார பூஜையை பயன்படுத்தி திருடுவார். வயதான தோற்றத்தை வைத்து கொண்டு நகைகளை திருடுவதில் சீனுவாசன் கில்லாடியாம்.
எத்தனையாவது கைது
சென்னையில் சங்கர் நகரில் தோஷம் கழிப்பதாகக் கூறி நகையை திருட முயன்ற சீனுவாசனை பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுவரை அவர் மீது 224 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
சில்வர் தாத்தா
நகரம் திரைப்படத்தில் ஸ்டைல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். அதில் ஒரு வீட்டில் திருட செல்லும் போது ஒரு வீட்டில் அண்ணனின் அடிவிழுதுகள் என்ற பெயரில் அவரது கூட்டாளிகள் போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பர். அதில் திருடர் குல திலகம் ஸ்டைல் பாண்டி அவர்களது 100-ஆவது திருட்டு விழா வெற்றி பெறவும் மேலும் பல வீடுகளில் திருடி 1000-ஆவது திருட்டு விழாவை கொண்டாட மனமாற வாழ்த்துகிறோம் என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பர். இதை கண்டவுடன் போலீஸார் வடிவேலுவை ரவுன்ட் அப் செய்து கைது செய்துவிடுவர். அதுபோல் சில்வர் தாத்தா 200-ஆவது முறை கைது செய்வதை பார்த்தால் இந்த காமெடிதான் நம் நினைவில் வந்து செல்கிறது.