இரு மாநில மக்களை பதற்றத்திலேயே வைத்திருந்த அரசியல்வாதிகள்: சீறிய சிம்பு
தனது கோரிக்கையை ஏற்று ஆதரவு அளித்த தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: சிம்புவின் கோரிக்கையை ஏற்று தமிழருக்கு தண்ணீர் கொடுப்பது போன்று வீடியோ வெளியிட்ட கர்நாடக மக்களுக்கும், கோரிக்கைக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடிகர் சங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய மவுன போராட்டத்தில் சிம்பு பங்கேற்கவில்லை. மாறாக செய்தியாளர்களை அழைத்த சிம்பு பேசுகையில் ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை கன்னட மக்கள் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் காவிரி தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோவை எடுத்து அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சிம்புவின் இந்த பேச்சை கேட்டு பெரும்பாலானோர் அவரை எதிர்மறையாக விமர்சிக்க தொடங்கினர். மறியல் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த பேச்சை யார் கேட்பர் என்றெல்லாம் ஏசினர். ஆனால் முன்னணி நடிகர்களுக்கு இல்லாத வரவேற்பு சிம்புவுக்கு மிகப் பெரிய அளவில் கர்நாடகத்தில் கிடைத்துள்ளது.
குவியும் பாராட்டுகள்
சிம்பு கேட்டுக் கொண்டது போல் தாங்கள் காவிரி நீரை தமிழக மக்களுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலத்துக்கு மக்களுக்கு தர தயாராக உள்ளோம் என்று கூறும் வகையில் ஏராளமான வீடியோக்களை சிம்புவின் சமூகவலைதளங்களுக்கு ஷேர் செய்துள்ளனர்.
அதிலும் #UniteForHumanity என்ற ஹேஷ்டேக்கில் ஷேர் செய்யுமாறு அவர் கூறியதால் அந்த ஹேஷ்டேக் டிரென்டாகியது.
சிம்பு நன்றி
ஒரே நாளில் சிம்பு உயர்ந்த நிலையை அடைந்துவிட்டார். இருமாநிலங்களுக்கிடையே எவ்வித வெறுப்பும் இல்லை, சகோரத்துவமே உள்ளது என்பதை நிலைநாட்டிவிட்டார். இதற்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பினால் எங்கு திரும்பினாலும் சிம்பு பேச்சாக இருக்கிறது. இதுகுறித்து சிம்பு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. காவிரி பிரச்சினையில் இத்தனை ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டத்தில் ஒரு மனிதாபிமானத்துடன், மனிதநேயத்துடன் கன்னடர்கள் உண்மையான ஆதரவை தெரிவித்துவிட்டீர்கள்.
தமிழ் மக்கள்
இதை ஏன் செய்தேன் என்பதை தற்போது நான் சொல்ல கடமைப்பட்டிருக்கேன். அதற்கு முன்னாடி கன்னட சகோதரர்கள், தாய்மார்களுக்கு, தம்பி, தங்கைகளுக்கு எனது மிகப்பெரிய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் எப்பவுமே கர்நாடக மக்களுக்கு தமிழ் மக்கள் என்றால் பிடிக்காது. தமிழ் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க கூடாது என வில்லன் மாதிரியான பிம்பத்தை சித்தரித்து தமிழர்களிடம் ஒரு வெறுப்புணர்வை உருவாக்குவதற்கு இத்தனை காலமாக சில அரசியல்வாதிகள் செய்துக் கொண்டிருந்த பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று நான் நெனச்சு அதற்கு எடுத்த முன்முயற்சிக்கு நீங்கள் இவ்ளோ பெரிய ஆதரவை தந்து அவர்கள் முகத்தில் கரியை பூசி நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் இதே நாட்ல தான் வாழ்றோம், நாம இந்தியனா இருக்க வேண்டும் என ஆதரவு கொடுத்து அத்தனை பேர் தண்ணீரை கொடுத்து இந்த பிம்பத்தை உடைத்ததற்கு கர்நாடக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொய் பிம்பம்
தமிழ்நாட்டில் இப்படியே சொல்லி சொல்லி கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுக்க மாட்டாங்க என்ற வெறுப்பை அந்த மக்கள் மேல் இத்தனை நாட்கள் உருவாக்கியதற்கு அப்படி கிடையாது அந்த மக்கள் தண்ணீர் கொடுப்பாங்க, அரசியல் ரீதியாக சித்து விளையாட்டை விளையாடினாங்க என்பதை நிரூபித்து இந்த விஷயத்துக்காக அத்தனை பேர் ஆதரவு கொடுத்து தமிழகத்தில் உங்களுடைய மனிதாபிமானத்தை மதித்து நீங்கள் செய்த ஒரு விஷயத்துக்கு இங்கே ஆதரவு தெரிவித்த தமிழ் மக்களுக்கும் நன்றி.
வன்முறையை தூண்டும்
நான் நினைத்த மிகப் பெரிய ஒரு விஷயத்தில் கடவுள் இந்த வெற்றியை கொடுத்திருக்காரு, இது என்னுடைய வெற்றி அல்ல, மக்களுடைய வெற்றி. கர்நாடகாவில் தமிழரின் பேருந்துகளை அடித்து நொறுக்குறாங்க, தமிழனை போட்டு அடிக்கிறாங்க என்ற ஒரு வீடியோவோ ஒரு செய்தியையோ அத்தனை செய்தி சேனல்களிலும் காண்பித்து அந்த விஷயத்தை பெரிதாக்கி ஒரு வன்முறையை தூண்டும் அளவுக்கு உருவாக்கியிருக்காங்க.
தீயசக்திகளுக்கு
ஆனால் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்ததை தமிழகத்தில் சில ஊடகங்கள் மட்டுமே ஒளிபரப்பினாங்க. இந்த விஷயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த விடாமல் வேறு சில செய்திகளை போட்டு இந்த விஷயத்தை மறைத்துள்ளார்கள்னு சொல்லும் போது இதை திசைத்திருப்பிய தீயசக்திகளுக்கு எனது நன்றி.
சகோதரத்துவம்
இது நீங்கள் செய்ததால்தான் தண்ணீரோ அல்லது நன்மையோ நம்ம மக்களுக்கு நடப்பது இவர்களின் அஜென்டா கிடையாது என மக்களுக்கு தெரியும். சண்டைதான்போட வேண்டும், ஒற்றுமையாய் இருக்கக் கூடாது என்பதுதான் இவர்களின் அஜென்டா என்பதை இன்று நிரூபித்து காட்டிவிட்டனர். அதுக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக, கர்நாடக மக்கள் சகோதரத்துவத்துடன் உள்ளோம் என்பதை காட்டிய மனிதாபிமானமுள்ள மக்களுக்கும் என் நன்றி.
ஒற்றுமையுடன் இருப்போம்
வன்முறையை தூண்டும் வகையில் இவர்கள் எந்த மாதிரி வேண்டுமானாலும் போராட்டம் செய்யட்டும். அதுபோல் கர்நாடகத்தில் போராட்டம் செய்தாலும் கவலைப்படாதீங்க. நீங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டீர்கள். மக்களாகிய நாம் என்ன செய்யபோறோம் என்பதை இவர்கள் பார்க்கத்தான் போறாங்க. இறைவன் இருக்கிறார், மனிதாபிமானம் என்றும் ஜெயிக்கும். அதையெல்லாம் மீறி சண்டையோ ,வன்முறையோ ஒரு பிரச்சினைக்கு தீர்வல்ல. அன்பை பரப்புவோம், மனிதாபிமானத்துக்காக நாம் ஒன்றிணைவோம். நம்முடைய திறமையை காண்பிக்க வேண்டிய நேரத்தில் காண்பிப்போம் என்றார் சிம்பு.