பீப் சாங்கிற்காக சிம்பு மன்னிப்பு கேட்டிருந்தால் நிலைமை மோசமாகியிருக்காது: மாதர் சங்க நிர்வாகி
சேலம்: பீப் பாடல் விவகாரத்தில் உரிய நேரத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டிருந்தால் விவகாரம் இந்த அளவுக்கு விபரீதமாகியிருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாதர் சங்க துணைத் தலைவர் வாசுகி கூறினார்.
நாமக்கல்லில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் வாசுகி கூறியதாவது: பீப் பாடலுக்காக சிம்பு தற்போது மன்னிப்பு கேட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
சிம்பு - அனிருத் பாடலை பொருத்தவரையில் இதற்கு முன்பு ஆபாசமாக வந்தது கிடையாதா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு முன்பும், இதுபோல பாடல்கள் வந்துள்ளன. ஆனால், பெண்களை, ஆபாசமாக சித்தரிப்பதாக இருந்தாலும், பெண்களை பிற்போக்காக சித்தரிக்கக் கூடிய விஷயமாக இருந்தாலும் நாங்கள் தலையிட்டிருக்கிறோம்.
ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த தரப்பு, இனிமேல் தப்பு செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். எந்த வருத்தமும் அவர் தெரிவிக்கவில்லை. ஆகவேதான் உரிய முறையில் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் புகார் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.