எளிமையின் சிகரம் விநாயகர் உருவம் உணர்த்தும் தத்துவம் தெரியுமா?
சென்னை: விநாயகர் எளிமையான கடவுள். களிமண், சாணம், மஞ்சள் என எதையும் பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார். எளிதில் கிடைக்கும் அருகம்புல், எருக்கு போன்ற பத்திரங்களாலும் பூக்களாலும் அர்ச்சனை செய்தாலும் ஏற்றுக் கொள்ள கூடியவர். குளந்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் விநாயகர்.
வெல்லம், கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்ற பொருட்களை நிவேதனம் செய்ய மகிழ்வார். அத்தகைய கடவுளுக்கு மனம் குளிர விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்கிறது விநாயக புராணம்.
பிற தெய்வங்களைப் போல அல்லாமல் விநாயகரின் உருவமே இந்த உலகிற்கு ஒரு உண்மையை உணர்த்துகிறது.
•பரந்த இவ்வுலகில் நல்லவைகளை மட்டுமே கூர்ந்து நோக்க வேண்டும் என்பதையே விநாயகரின் கூரிய சிறிய கண்கள் உணர்த்துகின்றன.
•செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விநாயகரின் முறம் போன்ற செவிகள் குறிக்கின்றன.
•விநாயகரின் ஒரு கையில் பாசம் உள்ளது, அது படைத்தலைக் குறிக்கின்றது. தந்தத்துடன் கூடிய தும்பிக்கை காத்தலைக் குறிக்கின்றது. அங்குசம் ஏந்தியகை அழித்தலைக் குறிக்கின்றது.
•மோதகம் ஏந்திய கை மறைத்தலைக் குறிக்கின்றது. உயர்த்திய கை அருளலைக் குறிக்கின்றது. இவ்வாறு ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன.
•விநாயகரின் பெரிய வயிறு எல்லா உயிர்களும், உலகங்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிக்கின்றது.
•விநாயகர் மகாபாரதத்தை எழுதுவதற்கு கொம்பை ஒடித்ததால் கொம்புகள் ஞானத்தைக் குறிக்கின்றன.
•விநாயகரின் பெரிய திருவடிகள் நல்லனவற்றை செய்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதைக் குறிக்கின்றன.
•மொத்தத்தில் விநாயகர் திருவுருவம் வெளித் தோற்றத்தைவிட அறிவுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றது.
•பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
•விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி என்கிறது புராணம். இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
•உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
•பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
•நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
•பிள்ளையாருக்கு எளிமையாக அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.
•இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.
•வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
•இந்த விரதங்களால் உள்ளம் மேன்மை அடையும்; உடல் ஆரோக்கியம் வளரும். எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார் என்கின்றனர் முன்னோர்கள்.