ஜெ.வை தனி வார்டுக்கு மாற்றியதில் அதிருப்தி: மீண்டும் வருகிறார் சிங்கப்பூர் மருத்துவர்
ஜெயலலிதாவை தனி வார்டுக்கு மாற்றியதற்கு அவருக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தனிவார்டுக்கு அப்பல்லோ நிர்வாகம் மாற்றியதாக வெளியான செய்திகளால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிங்கப்பூர் மருத்துவர் அதிருப்தி அடைந்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் சிங்கப்பூர் மருத்துவர் மீண்டும் சென்னைக்கு வரக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் 50 நாட்களுக்கு மேலாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தனிவார்டுக்கு மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த தகவல் அவருக்கு சிக்ச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயலலலிதாவை எங்களது அனுமதியில்லாமல் ஏன் தனிவார்டுக்கு மாற்றினீர்கள்? என அப்பல்லோ நிர்வாகத்திடம் சிங்கப்பூர் மருத்துவர் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் அப்பல்லோ நிர்வாகம் லண்டன் மருத்துவரை தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்திருக்கிறது.
லண்டன் மருத்துவரும் சிங்கப்பூர் மருத்துவரை தொடர்பு கொண்டு "உள்ளூர்" நிலைமைக்கேற்ப அப்பல்லோ நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது... இதை பெரிதுபடுத்த தேவையில்லை என சமாதானப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் சிங்கப்பூர் மருத்துவர் சமாதானமடையவில்லையாம்.
இதையடுத்து சென்னைக்கு வந்து நேரில் நிலைமையை ஆராய்வதாக கூறியிருக்கிறார் சிங்கப்பூர் மருத்துவர். இதனால் அவர் ஓரிரு நாட்களில் சென்னைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.