'சிங்காரவேலன் ஏமாற்றிவிட்டார்'- லிங்கா விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி!!
சென்னை: லிங்கா படம் நஷ்டம் என்று கூறி ரஜினிக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் இறங்கிய சிங்கார வேலன், தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, திருநெல்வேலியைச் சேர்ந்த எக்ஸிபிட்டர் ஐயப்பன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இப்போது வடபழனி சூர்யா மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
திருச்சி - தஞ்சை மாவட்டங்களில் லிங்கா படத்தை வெளியிடும் உரிமையை மெரினா பிலிம்ஸ் பெற்றது. இதன் மூன்று பங்குதாரர்களில் ஒருவர்தான் சிங்கார வேலன்.
வெளியிட்ட முதல் நாள் லிங்கா ரூ 1 கோடியை குவித்ததாக ட்விட்டர், பேஸ்புக்கில் கூறி, படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த இவர், அடுத்த இரண்டே நாட்களில் படத்தைப் பற்றி மிக மோசமாக விமர்சிக்க ஆரம்பித்தார். தெருத்தெருவாக நின்று ரஜினி மற்றும் லிங்கா குறித்து மிக மோசமாகப் பேசினார்.
அந்த வீடியோக்கள் இன்னும் இணையத்தில் உலா வருகின்றன.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக, லிங்கா விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், பெரும் தொகை விநியோகஸ்தர்களிக்குக் கைமாறியதாகவும்
தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான மறுநாள் சிங்காரவேலன் தரப்பு ரஜினிக்கும் ராக்லைன் வெங்கடேஷுக்கும் தாணுவுக்கும் நன்றி தெரிவித்து விளம்பரம் வெளியிட்டார்.
விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்ற ராக்லைன் வெங்கடேஷின் அருமை தெரியாமல் பேசிவிட்டதாக மன்னிப்பும் கோரினார்.
பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது என்றும், இனி இதுகுறித்து யாரும் பேசமாட்டகள் என்றும் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில். லிங்கா படத்துக்காக பெரும் தொகையை நஷ்ட ஈடாக வாங்கிய சிங்காரவேலனும் திருநெல்வேலி விநியோகஸ்தர் ரூபனும், தங்களை ஏமாற்றிவிட்டதாக மற்ற விநியோகஸ்தர்கள் நேரடியாகப் புகார் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் இந்த விவகாரத்தில் தற்கொலை முயற்சியில் இறங்கினார். விஷம் சாப்பிட்ட அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் வடபழனி சூர்யா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு நேரில் சென்றபோது லிங்கா படத்தின் இதர விநியோகஸ்தர்களான டெண்டுகொட்டாய் மற்றும் சுக்ரா பிலிம்ஸ் உரிமையாளர்கள் நம்மிடம் பேசினர்.
அவர்கள் கூறுகையில், "லிங்கா படத்தின் திருநெல்வேலி விநியோகஸ்தரான ரூபனுக்காக ரூ 65 லட்சம் வரை செலவு செய்து லிங்காவுக்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கொடுத்தவர் இந்த ஐயப்பன். இப்போது படத்தின் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்டு சிங்காரவேலனும் ரூபனும் கூட்டாக தலைமறைவாகிவிட்டார்கள். போன் செய்தாலும் எடுப்பதில்லை. வேறு சிலர் மூலம் விசாரித்ததில் தங்கள் பங்கை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்கள் ஒதுங்கிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இதில் மனமுடைந்து போய் ஐயப்பன் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்," என்றனர்.
தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த நஷ்ட ஈட்டுத் தொகையில் எந்தப் பங்குமே தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், இதில் சிங்காரவேலனும் ரூபனும் மட்டுமே பலனடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிங்காரவேலன் தரப்பில் எந்த விளக்கமும் இல்லை.