தற்கொலை செய்து கொள்வேன்..!- ரஜினி, தாணுவுக்கு புது மிரட்டல் விடும் சிங்காரவேலன்
'உங்களை எதிர்த்து என்னால ஒண்ணும் பண்ண முடியல. எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். அப்படி செய்து கொண்டால் உங்களையும் ரஜினியையும் உள்ளே உட்கார வைத்துவிடுவார்கள்.. பாக்குறீங்களா?'
-தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணுவுக்கு ஆடியோ மூலம் இப்படி புதிய மிரட்டல் விடுத்துள்ளார் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.
லிங்கா படத்தின் திருச்சி - தஞ்சை விநியோக உரிமை பெற்ற விநியோகஸ்தர்களில் ஒருவரான சிங்காரவேலன், அந்தப் படம் வெளியான நான்காவது நாளிலிருந்து செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள், முரணான பிரச்சாரங்கள், மிரட்டல்கள், நாடகங்கள் திரையுலகம் அறிந்ததே.
கிட்டத்தட்ட தினசரி பிரஸ் மீட் வைக்க ஆரம்பித்து, நாளும் ஒரு புகார், நஷ்டக் கணக்கு சொல்வதும், நஷ்ட ஈடு கேட்பதும் இன்றுவரை தொடர்கிறது.
லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு பெற்ற பிறகும், மேலும் மேலும் பணம் கேட்டுக் கொண்டிருந்தவர், இப்போது ரஜினியின் கால்ஷீட் வேண்டும் எனக் கேட்க ஆரம்பித்துள்ளார்.
ரஜினிக்கு வயதாகிவிட்டது, அவர் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்றெல்லாம் பேட்டிகள் கொடுத்தவர் இந்த சிங்காரவேலன் என்பது நினைவிருக்கலாம்.
லிங்கா பிரச்சினை தீர்ந்துவிட்டது என அறிவித்து கலைப்புலி தாணுவுக்கு நன்றி கூறி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, போஸ்டர் ஒட்டிய இதே சிங்கார வேலன் இப்போது, மீண்டும் லிங்கா பிரச்சினை இழுக்க ஆரம்பித்துள்ளார்.
இவரது நடவடிக்கைகளுக்கு இப்போது திரையுலகில் முற்றிலும் ஆதரவில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதன்பிறகு தாணுவையும், ரஜினியையும் 'உள்ளே' வைப்பார்கள் என்றும் ஆடியோ வடிவில் தாணுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் சிங்காரவேலன்.
அந்த வீடியோவில் அழுதபடி அவர் கூறியிருப்பதாவது:
தாணு அண்ணே, உங்களை நான் உயிருக்குயிரா நம்பினேன். நீங்க விநியோகஸ்தர்களுக்கு பணம் பெற்றுத் தருவீர்கள் என நம்பி நீங்கள் கொடுத்த ரூ 35 லட்சத்தை வாங்கிக் கொண்டேன். ஆனால் பிறகு மொத்த பணமும் தியேட்டர்காரர்களுக்கு போகும்படி செய்துவிட்டீர்கள்.
எங்களுக்கு நீங்கள் பணம் பெற்றுத் தருவது போல நடித்து மோசடி செய்துவிட்டீர்கள். உதவி செய்யற மாதிரி நடிச்சி ஏமாத்திட்டீங்க. நாங்க போராடறத கூட நீங்க உங்க அதிகாரத்தை வச்சி தடுக்கறீங்க.
மார்ச் மாசமே பணத்தைக் கொடுத்திருந்தா கூட நான் அந்த கங்காரு படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணியிருப்பேன். ஆனா அதை செய்யாம, கங்காரு தயாரிப்பாளரை வச்சி கேஸ் போடவச்சிட்டீங்க.
எங்க போராட்டத்துல யாரையும் கலந்துக்க விட மாட்டீங்கறீங்க.
உங்களையும் ரஜினி சாரையும் தண்டிக்க என்னால முடியும். என்கிட்ட அதிகாரமில்லாவிட்டாலும், நான் தற்கொலை பண்ணி உங்களுக்கு தண்டனை வாங்கித் தருவேன். நான் செத்துட்ட பிறகு உங்களையும் ரஜினியையும் உள்ளே வைத்துவிடுவார்கள்," என்று கூறியுள்ளார்.
இதனை ஆடியோவாக பதிவு செய்து வாட்ஸப்பில் தாணுவுக்கு அனுப்பி வைத்துள்ளார் சிங்காரவேலன்.
தன்னுடன் செல்போனில் பேசும் அத்தனை பேரின் பேச்சுக்களையும் அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்து வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும்போது, அதனை வாட்ஸப்பில் வெளியிடுவது அல்லது குறிப்பிட்ட நபருக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்பி வைப்பதை சிங்கார வேலன் வழக்கமாக வைத்துள்ளார். இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தற்கொலை மிரட்டல் ஆடியோவை தாணுவுக்கே சிங்காரவேலன் அனுப்பியுள்ளார்.