பாலமுரளி கிருஷ்ணா மறைவு சங்கீத ரசிகர்களுக்கு பெரிய இழப்பு: கமல்ஹாசன்
மறைந்த பாலமுரளி கிருஷ்ணா உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: மறைந்த கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடலுக்கு நடிகர் கமல், கர்நாடக இசைப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (86), சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் நடிகர் கமல், பாடகர் ஜேசுதாஸ், சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ், இந்திய கம்யூனிஸ் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோரும் நேரில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து கமல் கூறுகையில், இந்தியாவில் இதுவரையில் இவரைப் போல் யாரும் இல்லை. அதனால் இவர் புகழ் பற்றிப் பேச எனக்கு அருகதை கிடையாது. பாலமுரளி கிருஷ்ணா மிகப் பெரிய சாதனையாளர்.
அவருடைய மறைவு சங்கீத ரசிகர்களுக்கு பெரிய இழப்பாகும். இங்கு அவரைச் சந்திப்பதற்காகவும், இசைத் தகடுகளையும் வாங்கிச் செல்வதற்காகவும் பலமுறை வந்துள்ளேன். ஒரு சீடன் என்கிற முறையில் பேசுகிறேன். இப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதையும், அவரது இசையும் இந்த உலகம் உள்ள வரையில் என்றும் வாழும் என்றார்.
பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ், நான் 1957-இல் மியூசிக் அகாதெமியில் மாணவராக இருந்த போது, பாலமுரளி கிருஷ்ணா கச்சேரி செய்தார். அப்போது எனக்கு நன்கு அறிமுகமானார். அவர் சங்கீதத்தை முழுவதும் அறிந்த ஒரு பெரிய இசைக்கலைஞர். அதனால் என் குரு குமார்சாமி போல், இவரையும் பார்க்கிறேன் என்றார்.
பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து புதன்கிழமை பிற்பகல் சுமார் 3 மணிக்கு தகனத்துக்காக அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாலை 4 மணியளவில் பாலமுரளிகிருஷ்ணாவின் சிதைக்கு அவரது மகன் அபிராம் தீ மூட்டினார்