கோவை அருகே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானை... மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு
கோவை: கோவை அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் ஒன்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
கோவையை அடுத்துள்ள கோவைப்புதூர், அறிவொளி நகர், உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த ஒரு ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. இதனால், எப்போதும் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய நிலை உள்ளதால், தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
வழக்கமாக கோடை காலங்களில் வனப்பகுதியில் ஏற்படும் வறட்சி காரணமாக, வன விலங்குகள் ஊருக்குள் புகுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனாலும், மழை பெய்யத் தொடங்கியதும் அவைகள் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிடும். இப்படித்தான், ஒரு காட்டு யானைக் கூட்டமும் சமீபத்தில் ஊர்ப்பகுதியில் புகுந்தது. அந்த கூட்டத்தில் மற்ற யானைகள் அனைத்தும் வனப் பகுதிகளுக்குள் சென்றுவிட்ட நிலையில், ஒரே ஒரு யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து ஊர்ப் பகுதியில் சுற்றித் திரிகிறதாம்.
இதனால் அந்த ஒற்றை யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை அதிகாரிகளால் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஒற்றை யானையைப் பிடிக்கவில்லை என்றால் ஜூன் 10-ந் தேதி மண்டல வனப் பாதுகாவலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, அந்த ஒற்றை யானையை மயக்க மருந்து செலுத்திப் பிடிக்குமாறு மாநில முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார்.