சிங்கூர் போலத்தான் ஜெயங்கொண்டமும்… விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுங்கள்… கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்
சென்னை: மேற்கு வங்கத்தில் டாடா தொழிற்சாலைக்காக சிங்கூர் நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் ஜெயங்கொண்டத்தில் மின்உற்பத்தி திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்திற்கும் பொருத்தும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்கூரில் டாடா தொழிற்சாலைக்காக எப்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதோ, அதேபோன்றுதான் தமிழ் நாட்டிலும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 2400 மெகாவாட் மின்திட்டத்தை செயல்படுத்த 1993ம் ஆண்டு தமிழக அரசு முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்திற்காக, மேலூர், புதுக்குடி, தண்டலை, பெரியவளையம், தேவிமங்களம், புறஞ்சேரி, கல்லாத்தூர் உள்பட 23 கிராமங்களில் இருந்து 7210 விவசாயிகளிடமிருந்து 8300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் அரசுக்கு சொந்தமான 1030 ஏக்கர் தரிசு நிலமும் ஒதுக்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை விலையைவிட மிகக்குறைவாக 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பல குளறுபடியால் இந்தத் திட்டம் தொடங்கப்படவே இல்லை.
சிங்கூர் நிலம் பற்றிய தீர்ப்பில், "டாடா நிறுவனத்திற்காகத்தான் நிலம் கையகப்படுத்தப்படுவதாக அறிவிக்கைகளில் கூறப்பட்டுள்ளதே தவிர, பொது பயன்பாடு என்பது பற்றி எங்கும் இல்லை" என்று நீதிபதி போபாலகவுடா குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, தமிழ்நாட்டில் ஜெயங்கொண்டம் மின்திட்டத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல்படுத்தும் என்று 1993ம் ஆண்டு அறிவிக்கப்பட்டாலும், 1996ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ரிலையன்ஸ் தலைமையிலான கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சிங்கூர் நிலம் கையகப்படுத்தியதில் பொதுநலன் இல்லாதது போன்றே ஜெயங்கொண்டத்தில் நிலம் கையகப்படுத்தியதிலும் பொது நலன் இல்லை.
இரண்டாவதாக, சிங்கூரில் எதிர்ப்பு அதிகரித்தால் டாடா நிறுவனம் தனது இடத்தை காலி செய்து கொண்டு குஜராத் சென்றுவிட்டதால் நிலம் கையகப்படுத்தியது செல்லது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று ஜெயங்கொண்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலும் 20 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே, ஜெயங்கொண்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே தமிழக அரசு திருப்பி கொடுக்க வேண்டும். நிலங்களை 20 ஆண்டுகள் முடக்கி வைத்திருந்ததற்காக நீதிமன்றம் நிர்ணயித்த இழப்பீட்டுடன் வட்டியும் சேர்த்து ஏக்கருக்கு குறைந்தபட்சம் 14 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஒருவேளை மின்னுற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தால் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி இழப்பீடு நிர்ணயித்து கையகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து ஆண்டுக்கு 12 சதவீத வட்டி சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.