தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்... சீர்காழியில் தண்ணீரை உறிஞ்சிய மோட்டார்கள் பறிமுதல்
தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில், சீர்காழியில் நகராட்சித் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் மோட்டார்களை பறிமுதல் செய்துள்ளனர் அதிகாரிகள்.
சீர்காழி: கடும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு குழாய் மூலம் வழங்கப்பட்டு வரும் தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதாக நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கலெக்டர் மற்றும் தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன் உத்தரவின்பேரில் நாகை மற்றும் திருவாரூர் மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மோகனரங்கன், சிவகுமார், பாரதிதாசன், கமலக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி உட்பட்ட 15 வார்டுகளிலும் நேரில் சென்று அதிரடி ஆய்வைமேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் வீடுகள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அதில் பல்வேறு வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய 21 மின் மோட்டார்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இடங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்தனர். ஆய்வின்போது பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.