சிறுதாவூர் நில முறைகேடு.. ஜெ. அரசின் தில்லுமுல்லு பற்றி சிவசுப்பிரமணியன் கமிஷன் கூறியது என்ன?
இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் சிறுதாவூர் நிலத்தை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பட்டாவை பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி தங்கிச் செல்லும் சிறுதாவூர் பங்களா அருகே இன்று ஏற்பட்ட தீ விபத்து பரபரப்புக்கு காரணமாகியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள சிறுதாவூர் கிராமத்தில் ஜெயலலிதா அடிக்கடி தங்கி ஓய்வெடுக்கும் பங்களா உள்ளது. அந்த பங்களா அமைந்துள்ள இடம் தலித்துகளுக்கான பஞ்சமி நிலம் என்பதால் அதை மீட்க கோரிக்கை விடப்பட்டது.
இது குறித்து விசாரித்த நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் கமிஷன் அறிக்கை சட்டசபையில் 2010ம் ஆண்டில், தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்ட சில முக்கிய அம்சங்களை 'ஒன்இந்தியா தமிழ்' அப்போதே வெளியிட்டிருந்தது.
விற்பனை செய்ய முடியாது
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 1967ம் ஆண்டில், மத்திய அரசு திட்டத்தின் கீழ், சிறுதாவூர் கிராமத்தில் உள்ள 20 நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2.50 ஏக்கர் நிலம் இலவசமாக அளிக்கப்பட்டது. நிலம் வழங்கப்பட்ட திட்டத்தின் கீழ், நிலத்தை பெற்றவர்கள் 25 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை, யாருக்கும் விற்க முடியாது என்றபோதிலும், 1983ம் ஆண்டில் எஸ்.வி.கோபாலன், கிருஷ்ணமாச்சாரி, சுனில் சட்டநாதன் ஆகியோருக்கு ரூ.8,750க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதன்பிறகு, அந்த நிலம் பலரது கைமாறியுள்ளது. இது தொடர்பாக வருவாய் ஆவணங்களிலும் அவ்வப்போதைக்கு பதிவு செய்து வரப்பட்டிருக்கிறது.
அரசுக்கு அதிகாரம்
நில உரிமையாளர்கள் 1983ல் விற்பனை பத்திரம் உருவாக்கவில்லை என்றும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை என்றும், திருப்போரூரில் உள்ள ஒரு சத்திரத்தில் ஒரு ஆவணத்தில் கையெழுத்து மட்டும் போட்டு நிலத்தை விற்றதாகவும் சொல்லியிருப்பதை ஏற்க முடியாது. சட்டத்தின்படி அந்த நிலத்தை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. நிலத்தை பெற்றவர்கள், அதை மற்றவர்களுக்கு விற்றிருந்தாலும், அது பல கைகள் மாறியிருப்பினும், அவையெல்லாம் அரசை கட்டுப்படுத்தாது.
அரசுக்கு தடையில்லை
நிலத்தை பெற்றவர்களிடம் இருந்து அந்த நிலம் பறிக்கப்படாவிட்டாலும் கூட, அவர்களது ஒப்புதலின் பேரிலேயே நில விற்பனை நடந்துள்ளது. இருந்தாலும் கூட அந்த நிலத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசின் எல்லைக்குட்பட்டே இருக்கிறது. நிலத்தை முதலில் பெற்றவர்களுக்கும், அதற்கு அடுத்ததாக வாங்கியவர்களுக்கும் பட்டா கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட அவை, நிலத்தை கையகப்படுத்தும் அரசின் அதிகாரத்துக்கு தடையை ஏற்படுத்தாது.
தாசில்தாரே மாற்றம்
பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்துக்கு சிறுதாவூரில் பிரச்சனைக்குரிய இடத்தில் நிலம் வாங்கியதற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் வருவாய்த் துறை விதிகளின்படி, விசாரணை எதுவும் நடத்தப்படாமல் பட்டா வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு விதிகளுக்கு மாறாக பட்டா வழங்குவதற்காக, தூத்துக்குடியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு தியாகராஜன் என்ற தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான பணியிடத்தை உருவாக்குவதில் அப்போதைய (அதிமுக) அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
சசிகலாவின் உறவினர்கள்
அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது இதில் குற்றச்சாட்டு கூறப்படவில்லை என்றபோதிலும், அவரின் தோழியாக இருந்த, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் சிறுதாவூர் நிலத்தை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பட்டாவை பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இதற்காகவே அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியெல்லாம் சர்ச்சைக்கு உள்ளான இடம்தான் சிறுதாவூர் பங்களா.