சிறுவாணி அணை வறண்டது... கோவையில் கடும் குடிநீர் பஞ்சம் - தவிக்கும் மக்கள்
வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு போனது. கோவை நகருக்கு தற்போது சிறுவாணி தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
கோவை: உங்க ஊர் பக்கம் மழையா?என்று போனில் கேட்ட காலம் போய், உங்க ஊர்ல எத்தனை நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது என்று கேட்கத் தொடங்கிவிட்டனர் கோவை வாசிகள். அந்த அளவிற்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
செட்டிலான கோயம்புத்தூர் பக்கம் செட்டிலாகனும் என்பது பலரது கனவு. ஏசி போட்டுக்கொண்ட நகரம், சில்லென்ற காற்று ஒருபக்கம், ருசியான சிறுவாணி குடிநீர் மறுபக்கம் என பலரையும் கோவையின் பக்கம் ஈர்த்தது. அமைதியான ஊர், மரியாதை தெரிந்த மனிதர்கள் வசிக்கும் ஊர் என்பதும் ஒரு காரணம்.
வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு போனது. கோவை நகருக்கு தற்போது சிறுவாணி தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
ஏமாற்றிய பருவமழை
கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவு பருவமழை பெய்யாததால் சிறுவாணி அணை நிரம்பவில்லை. இதனால் குடிநீர் எடுப்பது படிப்படியாக குறைக்கப்பட்டது. ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், மூன்று நாட்களுக்கு ஒருமுறை, வாரத்துக்கு ஒருமுறை, 15நாட்களுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டது. இப்போது சிறுவாணி தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சிறுவாணி அணையில் தற்போது நீர் இருப்பு டெத் ஸ்டோரேஜை தாண்டி உள்ளது. அணையின் நீர்புகு கிணறு பகுதியில் உள்ள நான்கு வால்வுகளும் வெளியே தெரிகிறது. கடந்த சில வாரங்களாக டணல் வழியாக நீர் எடுக்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
சிறுவாணி அணை
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது சிறுவாணி அணை. இந்த அணையில் 878.50 மீட்டர் அளவுக்கு தண்ணீர் தேக்க முடியும். சிறுவாணி குடிநீர், வழியோர பகுதிகளில் உள்ள 22 கிராம பகுதிகளுக்கும், மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
ருசியான தண்ணீர்
இந்தியாவிலேயே 2வது சுவையான தண்ணீர் என்றால் சிறுவாணி நீர் தான் என அனைத்து மாநில மக்களும் கூறுவார்கள். கோவை மக்களின் தாகம் தீர்ப்பதற்காக சிறுவாணி குடிநீர் திட்டம் 1929ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிறுவாணி தண்ணீருக்கு 85 வயது ஆகிறது.
ஏமாற்றிய பருவமழை
சிறுவாணி அணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிரம்பியது. அதன்பின்னர் பெய்த பருவமழை கைகொடுக்கவில்லை. அதனால், சிறுவாணி அணை நிரம்பவில்லை. கடந்த நவம்பர் 1ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை காலத்திலும், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதன்காரணமாக, சிறுவாணி அணை நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது.
வறண்ட அணை
பருவமழை ஏமாற்றியதால் சிறுவாணி அணை தற்போது வறண்டு விட்டது. நீர் இருப்பு, டெத் ஸ்டோரேஜ் அளவை தாண்டி உள்ளது. வழக்கமாக கோடை காலமாக ஏப்ரல், மே மாதங்களில்தான் அணை வறண்டு காணப்படும். இந்த ஆண்டு ஜனவரி மாதமே அணை வறண்டு விட்டதால் கோவை மாநகரில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
தண்ணீர் பஞ்சம்
சிறுவாணி குடிநீர் நிறுத்தப்பட்டு, மாநகர் முழுவதும் பில்லூர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பல இடங்களில் லாரி தண்ணீர் பிடிக்க பெண்கள் நள்ளிரவிலும் காலி குடங்களுடன் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
விலை கொடுத்து வாங்கும் நிலை
கோவைக்கு அருகில் உள்ள கிராமப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் கூட 15 நாட்களுக்கு ஒருமுறையே விநியோகம் செய்யப்படுகிறதாம். குடிப்பதற்கு அதிக விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் உள்ளூர்வாசிகள்.
தாகத்தில் தவிப்பு
சிறுவாணி திட்டத்துக்கு அடிகோலியவர்களில் ரத்தினசபாபதி முதலியார், எஸ்.பி.நரசிம்மலு நாயுடு, திருவேங்கடசாமி முதலியார், ராமலிங்க செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த ஆண்டு சிறுவாணி அணை வறண்டு விட்டதால் ருசியான தண்ணீர் கிடைக்காமல் கோவை வாசிகள் தாகத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதுதான் வேதனை.