புதையல் நகை என போலியை கொடுத்து மோசடி... கில்லாடி அக்கா, தம்பி கைது
தென்காசி : புதையல் நகைகள் எனக் கூறி போலி நகைகளைக் கொடுத்து மோசடி செய்த அக்கா, தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தென்காசி அருகேயுள்ள பாவூர் சத்திரம் பகுதியை சார்ந்தவர் ராஜ்குமார் இவர் இப்பகுதியில் விளையாட்டு உபகரணங்கள் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன் தினம் தென்காசி பழைய பேருந்து நிறுத்தம் அருகே இவர் நின்று கொண்டிருந்த போது ஒரு ஆணும்,பெண்ணும் இவரை சந்தித்துள்ளனர்.
அப்போது அவர்கள் தங்களிடம் புதையல் எடுத்த 2 கிலோ தங்க காசுமாலை இருப்பதாகவும் அதன் விலை ரூ.10 லட்சம் என்றும் கூறியுள்ளனர்.
நம்பிக்கையில்லை என்றால் இந்த நகையை சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறவே அவர்கள் கொடுத்த நகையோடு ராஜ்குமார் தனக்கு தெரிந்த ஒரு கடைக்கு சென்று சோதித்துப் பார்க்கவே அது ஒரிஜினல் தங்கம் என்று தெரிய வந்தது. உடனே ராஜ்குமார் அவர்கள் கேட்கும் பணம் தன்னிடமில்லை என்றும், 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, இருவரும் புதையல் நகையை வெளியில் கொண்டு செல்ல முடியாது கூறி, இருந்த பணத்தை பெற்றுக்கொண்டு நகையை கொடுத்துள்ளனர். ராஜ்குமார் அனைத்தையும் வாங்கிகொண்டு போய் பரிசோதித்துள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததையடுத்து, தென்காசி போலீசில் புகார் செய்தார்.
புகரைத் தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில் குத்துக்கல் வலசை என்ற பகுதியில் டெண்ட் கொட்டகை அமைத்து இந்த கும்பல் தங்கியிருப்பது தெரிய வரவே அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கர்நாடக மாநிலத்தை சார்ந்த சாந்தி, பீம் என்பதும், இவர்கள் அக்கா, தம்பி என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ போலி நகைகளும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.