மதுரையில்.. லாரிக்குக் கீழ் வெடித்த மர்மப் பொருள்.. போலீஸ் தீவிர விசாரணை
மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை இரவு லாரியின் கீழே வெடிகுண்டு வெடித்த வழக்கில் தனிப்படை, சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை சின்ன சொக்கிகுளம் கமலா தோப்பு தெருவைச் சேர்ந்த வேதநாயகம் செல்வகுமார் (37) என்பவர் தனது உறவினருக்குச் சொந்தமான லாரியை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, ஏ.வி. பாலம் கீழ்பகுதிக்குச் செல்லும் சாலையோரம் தனது லாரியை நிறுத்தியிருந்தார் செல்வகுமார். அப்போது 10.30 மணியளவில் லாரியின் முன் சக்கரம் அருகே திடீரென வெடிச்சத்தம் கேட்டது.
இதையடுத்து செல்வகுமார் உள்ளிட்டோர் லாரியின் அருகே சென்று பார்த்தபோது, அங்கு பிளாஸ்டிக் டப்பா உள்ளிட்ட பொருள்கள் சிதறிக் கிடந்தன.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளக்குத்தூண் போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர். அப்போது, லாரியின் கீழே சிறிய பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் டப்பா மற்றும் சணல் துண்டுகள், கடிகாரம் போன்ற அமைப்பு, பேட்டரி ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், வெடித்தது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு என தெரிய வந்தது.
இதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஆரப்பாளையம் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு அரசுப் பேருந்துகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதுதொடர்பாக மத தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அதேபோல் தற்போது லாரி அடியிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தென் மண்டல ஐ.ஜி. முருகன், மாநகர காவல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும், சிறப்பு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்கவும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘குண்டுவெடிப்பு குறித்து தனிப்படை, சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் விரைவில் சிக்குவர்'' என்றனர்.